Home நாடு தேர்தல் 14: திராம் சட்டமன்றத்தில் மீண்டும் போட்டியிட குமுதா தயார்!

தேர்தல் 14: திராம் சட்டமன்றத்தில் மீண்டும் போட்டியிட குமுதா தயார்!

1287
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – திராம் சட்டமன்றத் தொகுதியில், பாஸ் கட்சி வேட்பாளர் குமுதா ராமன், கடந்த 2008, 2013 இரண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

எனினும், வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், திராம் தொகுதியிலேயே மீண்டும் முயற்சி செய்யப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

39 வயதான சட்ட அதிகாரியான குமுதா இது குறித்துக் கூறுகையில், “2013 பொதுத்தேர்தலில் நகர்புறங்களில் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் பெல்டா பகுதிகள் தான் கைகொடுக்கவில்லை.

#TamilSchoolmychoice

“மலேசியா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. ஒருவேளை நான் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பாரபட்சமின்றி அனைவரையும் சமமாக நடத்துவேன். அதை தான் அனைத்து அரசியல் தலைவர்களும் செய்ய வேண்டும்.

“முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஒரு சிறும்பான்மையினமாக இருந்தாலும், தனது நாட்டிற்காக நல்ல முறையில் செயலாற்றினார்.

“எனவே, மக்கள், வேட்பாளர்களின் செயல்திறனை அறிந்து அவர்களால் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா? என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்” என்று குமுதா தெரிவித்திருக்கிறார்.

14-வது பொதுத்தேர்தலில், குமுதாவை ஜோகூர் ஜெயா தொகுதிக்கு மாற்றுவதற்கு பாஸ் தலைமை ஆலோசித்து வருவதாகவும் ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.

ஜோகூர் தொகுதியில் பாஸ் கட்சி, இஸ்லாம் அல்லாத வேட்பாளர்களை நிறுத்துவதில் முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.