Home நாடு சுங்கை பாக்காப்: வாக்களிப்பு தொடங்கியது! குறுகிய பெரும்பான்மையில்தான் வெற்றி!

சுங்கை பாக்காப்: வாக்களிப்பு தொடங்கியது! குறுகிய பெரும்பான்மையில்தான் வெற்றி!

345
0
SHARE
Ad

நிபோங் திபால் : நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பினாங்கு, சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (ஜூலை 6) காலை 8.00 மணிக்குத் தொடங்கியது.

பக்காத்தான் ஹாரப்பான் – பெரிக்காத்தான் நேஷனல் நேஷனல் இடையிலான இருமுனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது சுங்கை பாக்காப்.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் சனிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இன்றைய தேர்தலில் 552 தேர்தல் ஆணையப் பணியாளர்கள், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்கான சுமார் 800 காவல் துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

9 வாக்களிப்பு மையங்கள் 65 வரிசைகளுடன் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை திறந்திருக்கும். 39,151 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குகள் சரிபார்க்கப்படுவது தாமான் டேசா ஜாவி பகுதியில் உள்ள ஜாவி பலநோக்கு மண்டபத்தில் நடைபெறும். இரவு 10.00 மணிக்குள்ளாக முடிவுகள் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிபோங் திபால் தொகுதியின் பாஸ் துணைத் தலைவர் அபிடின் இஸ்மாயில், சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ்- பெரிக்காத்தான் கூட்டணி சார்பாகப் போட்டியிடுகிறார்.

56 வயதான அபிடின், சுங்கை பாக்காப் பாஸ் தேர்தல் இயக்குநராகவும் உள்ளார்.

அபிடின், 1968-ஆம் பிறந்தவர்.  சுங்கை பாக்காப் வட்டாரத்திலேயே பிறந்து வளர்ந்து ஆரம்பக் கல்வியையும் பெற்றவர்.

ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் அவர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில், காலமான சாம்ரி நேரடிப் போட்டியில் 52.7 சதவீத வாக்குகள் பெற்று சுங்கை பாக்காப் தொகுதியில் வெற்றி பெற்றார்.

அதற்கு முன்பு, 2008 முதல் 2018 வரை மூன்று தவணைகள் பிகேஆர் அந்தத் தொகுதியை வெற்றிகரமாகக் கைப்பற்றி வந்தது.

பிகேஆர் வேட்பாளர் ஜூஹாரி அரிபின் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார்.

ஜூஹாரி அரிபினுக்கு வயது 60.

ஒரு காலத்தில் அன்வார் இப்ராகிம் தலைமை வகித்த அபிம் என்னும் மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த ஜூஹாரி அரிபின் இஸ்லாமிய அறிவு கொண்ட பின்னணியை உடையராவார்.

ஜூஹாரி அரிபின் கெடாவிலுள்ள இன்ஸ்டிடியூட் அமினுடின் பாகி கல்விக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளருமாவார்.

பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர், 56 வயதான நோர் சாம்ரி லாத்திஃப் கடந்த மே 24-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

சுங்கை பாக்காப், பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 59.4 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும், 22.5 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும், 17.4 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் 0.7 விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் சுங்கை பாக்காப் கொண்டிருக்கிறது.

காலமான நோர் சாம்ரி, நிபோங் திபால் தொகுதி பாஸ் கட்சியின் தலைவருமாவார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் 1,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நூர்ஹிடாயா சே ரோஸ் ஆவார்.

மலாய்-முஸ்லீம் அல்லாத வாக்குகளை ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் ஜூஹாரி முழுமையாகப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 60 விழுக்காடு மலாய்-முஸ்லீம் வாக்குகளில் பெரும்பான்மையானவற்றை பாஸ் வேட்பாளர் பெறுவார் என கணிக்கப்படுகிறது.

யார் வெற்றி பெற்றாலும் குறுகிய வாக்குகள் பெரும்பான்மையிலேயே வெற்றி பெற முடியும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.