Home நாடு சுங்கை பாக்காப் : பாஸ் – பெரிக்காத்தான் வேட்பாளராக அபிடின் இஸ்மாயில் போட்டி!

சுங்கை பாக்காப் : பாஸ் – பெரிக்காத்தான் வேட்பாளராக அபிடின் இஸ்மாயில் போட்டி!

397
0
SHARE
Ad
சுங்கை பாக்காப் வேட்பாளர் அபாங் அபிடின் இஸ்மாயில் (இடது) – பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் (வலது)

ஜோர்ஜ் டவுன் : நிபோங் திபால் தொகுதியின் பாஸ் துணைத் தலைவர் அபிடின் இஸ்மாயில், வரவிருக்கும் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ்- பெரிக்காத்தான் கூட்டணி சார்பாகப் போட்டியிடுவார்.

56 வயதான அவர், தன் கட்சியின் மறைந்த சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் நோர் சம்ரி லத்திஃப் அவர்களின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவேன் என உறுதி வழங்கினார். காலமான சாம்ரி நிபோங் திபால் பாஸ் தொகுதி தலைவராகவும் இருந்தார்.

“கடவுள் விரும்பினால், சுங்கை பாகாப் மக்களால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், சம்ரியின் பாரம்பரியத்தைத் தொடர்வேன்.

#TamilSchoolmychoice

“நான் அவருடன் மிக நெருக்கமாக இருந்தேன், எனவே அவருடன் என்னுடைய பல இனிய மற்றும் துயரமான நினைவுகள் உள்ளன,” என்று அபிடின் தனது உரையில் கூறினார். அவரின் வேட்பாளர் நியமனத்தை பாஸ் தேசியத் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், செபெராங் பிறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அறிவித்தார்.

அபிடின், சுங்கை பாக்காப் பாஸ் தேர்தல் இயக்குநராகவும் உள்ளார்.

அபிடின், 1968-ஆம் பிறந்தவர்.  சுங்கை பாக்காப் வட்டாரத்திலேயே பிறந்து வளர்ந்து ஆரம்பக் கல்வியையும் பெற்றவர்.

ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் அவர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

அபிடின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் பாஸ் கட்சியையும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உறுப்பியக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில், சாம்ரி நேரடிப் போட்டியில் 52.7 சதவீத வாக்குகள் பெற்று சுங்கை பாக்காப் தொகுதியில் வெற்றி பெற்றார்.

அதற்கு முன்பு, 2008 முதல் 2018 வரை மூன்று தவணைகள் பிகேஆர் அந்தத் தொகுதியை வெற்றிகரமாகக் கைப்பற்றி வந்தது.

பிகேஆர் வேட்பாளர் ஜூஹாரி அரிபின்

 

ஜூஹாரி அரிபின் – சுங்கை பாக்காப் சட்டமன்ற பிகேஆர் வேட்பாளர்

சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிகேஆர் வேட்பாளராக ஜூஹாரி அரிபின் அறிவிக்கப்பட்டார். அவருக்கு வயது 60.

புதன்கிழமை (ஜூன் 12) மாலை சுங்கை பாக்காப்பில் நடைபெற்ற கூட்டத்தில் அவரை வேட்பாளராக பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி அறிவித்தார்.

ஒரு காலத்தில் அன்வார் இப்ராகிம் தலைமை வகித்த அபிம் என்னும் மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த ஜூஹாரி அரிபின் இஸ்லாமிய அறிவு கொண்ட பின்னணியை உடையராவார்.

ஜூஹாரி அரிபின் கெடாவிலுள்ள இன்ஸ்டிடியூட் அமினுடின் பாகி கல்விக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளருமாவார்.

இதற்கிடையில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பிகேஆர் சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் ரபிசி ரம்லியும் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் சாம்ரி அப்துல் காடிரும் நியமிக்கப்பட்டுள்ளானர்.

பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர், 56 வயதான நோர் சாம்ரி லாத்திஃப் கடந்த மே 24-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

சுங்கை பாக்காப், பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 59.4 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும், 22.5 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும், 17.4 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் 0.7 விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் சுங்கை பாக்காப் கொண்டிருக்கிறது.

காலமான நோர் சாம்ரி, நிபோங் திபால் தொகுதி பாஸ் கட்சியின் தலைவருமாவார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் 1,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நூர்ஹிடாயா சே ரோஸ் ஆவார்.

சுங்கை பாக்காப் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும். வாக்களிப்பு ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும்.