Home நாடு சுங்கை பாக்காப் : ஜூஹாரி அரிபின் பிகேஆர் – ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்!

சுங்கை பாக்காப் : ஜூஹாரி அரிபின் பிகேஆர் – ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்!

274
0
SHARE
Ad
ஜூஹாரி அரிபின் – சுங்கை பாக்காப் சட்டமன்ற பிகேஆர் வேட்பாளர்

ஜோர்ஜ் டவுன் : சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிகேஆர் வேட்பாளராக ஜூஹாரி அரிபின் அறிவிக்கப்பட்டார். அவருக்கு வயது 60.

நேற்று புதன்கிழமை (ஜூன் 12) மாலை சுங்கை பாக்காப்பில் நடைபெற்ற கூட்டத்தில் அவரை வேட்பாளராக பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி அறிவித்தார்.

ஒரு காலத்தில் அன்வார் இப்ராகிம் தலைமை வகித்த அபிம் என்னும் மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த ஜூஹாரி அரிபின் இஸ்லாமிய அறிவு கொண்ட பின்னணியை உடையராவார்.

#TamilSchoolmychoice

ஜூஹாரி அரிபின் கெடாவிலுள்ள இன்ஸ்டிடியூட் அமினுடின் பாகி கல்விக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளருமாவார்.

இதற்கிடையில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பிகேஆர் சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் ரபிசி ரம்லியும் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் சாம்ரி அப்துல் காடிரும் நியமிக்கப்பட்டுள்ளானர்.

பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர், 56 வயதான நோர் சாம்ரி லாத்திஃப் கடந்த மே 24-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

சுங்கை பாக்காப், பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 59.4 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும், 22.5 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும், 17.4 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் 0.7 விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் சுங்கை பாக்காப் கொண்டிருக்கிறது.

காலமான நோர் சாம்ரி, நிபோங் திபால் தொகுதி பாஸ் கட்சியின் தலைவருமாவார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் 1,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நூர்ஹிடாயா சே ரோஸ் ஆவார்.

சுங்கை பாக்காப் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும். வாக்களிப்பு ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும்.