Home நாடு 1எம்டிபி நடவடிக்கைக் குழு – அமெரிக்க நீதித் துறை இலாகா – சந்திப்பு

1எம்டிபி நடவடிக்கைக் குழு – அமெரிக்க நீதித் துறை இலாகா – சந்திப்பு

931
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – 1எம்டிபி விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக் குழு, அமெரிக்காவின் நீதித் துறை இலாகா மற்றும் எப்.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளோடு சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (24 மே) காலை புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

1எம்டிபி விவகாரங்களை விசாரிக்க நால்வர் கொண்ட நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“1எம்டிபி தொடர்பான சொத்துகளை மீட்கப் போராடி வரும் அமெரிக்க நீதித் துறை அரசாங்கத் தலைமை வழக்கறிஞருக்கு சட்ட ஒத்துழைப்பு குறித்த கடிதம் செப்டம்பர் 2017-இல் அனுப்பியும் இதுவரையில் பதில் அனுப்பப்படவில்லை. மேலும், நவம்பர் 2016-இல் அப்போதைய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் சுல்கிப்ளி அகமட்டுக்கு எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தும் இதுவரை பதில் அனுப்பப்படவில்லை. எனவே இதன் தொடர்பிலான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இதுவரையில் அமெரிக்க நீதித் துறையின் விசாரணைக்கு மலேசிய அரசாங்கம் எந்தவித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை” என 1எம்டிபி நடவடிக்கைக் குழு விடுத்த அறிக்கை ஒன்றில் நேற்று தெரிவித்திருக்கிறது.

1எம்டிபி சொத்துகளை மீட்க அமெரிக்க நீதித் துறை இதுவரையில் 30 சொத்து பறிமுதல் செய்யும் பொது (சிவில்) வழக்குகளைத் தொடுத்துள்ளது.

இக்குனாமிட்டி என்ற ஆடம்பர உல்லாசப் படகும் அத்தகைய சொத்துகளில் ஒன்றாகும்.