Home கலை உலகம் ஜேம்ஸ் பாண்ட் – மீண்டும் டேனியல் கிரேய்க்

ஜேம்ஸ் பாண்ட் – மீண்டும் டேனியல் கிரேய்க்

1066
0
SHARE
Ad
ஜேம்ஸ் பாண்ட் – மீண்டும் டேனியல் கிரெய்க்

ஹாலிவுட் – ஆங்கிலப் பட உலகில் மிக வெற்றிகரமான தொடர் படங்களாக இரசிகர்களை மகிழ்வித்த ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் 25-வது படமாக அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் அடுத்த ஆண்டில் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஐந்தாவது முறையாக டேனியல் கிரெய்க் மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். இனிமேல் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று டேனியல் முன்பு அறிவித்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகரைத் தயாரிப்பாளர்கள் தேடி வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

ஆனால், மீண்டும் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தப் புதிய படத்தை இயக்கப் போவது டேனி போய்ல். யார் அவர் என்று கேட்பீர்கள்.

இந்தியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்லம்டோக் மில்லியனர்’ என்ற ஆங்கிலப் படம் உலகையே வசூலிலும், இரசிப்புத் தன்மையிலும் ஒரு கலக்கு கலக்கியதை சினிமா இரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கார் விருதுகளையும் வாங்கித் தந்த அந்தப் படத்தின் இயக்குநர்தான் டேனி போய்ல். இதனால் புதிய ஜேம்ஸ் பாண்ட் படம் வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பரில் இலண்டனின் புகழ் பெற்ற பைன்வுட் ஸ்டூடியோ என்ற படப்பிடிப்பு அரங்கத்தில் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி அடுத்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும்.