Home உலகம் 2-1: சுவீடனை வீழ்த்தி உயிர்பெற்ற ஜெர்மனி

2-1: சுவீடனை வீழ்த்தி உயிர்பெற்ற ஜெர்மனி

952
0
SHARE
Ad

மாஸ்கோ – நேற்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 3-வது போட்டியில் 2-1 கோல் எண்ணிக்கையில் சுவீடனை வீழ்த்தியதன் மூலம், ஜெர்மனி மீண்டும் உயிர்பெற்று, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டுள்ளது.

“எஃப்” பிரிவின் இந்த ஆட்டம் தொடங்கிய 32-வது நிமிடத்தில் சுவீடனின் ஒலா தொய்வோனன் அடித்த கோல் ஜெர்மன் விளையாட்டாளர்களின் மனோவலிமையை நிச்சயம் சிதைத்திருக்க வேண்டும். காரணம் ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் மெக்சிகோவிடம் 1-0 கோல் கணக்கில் ஜெர்மனி தோற்றதைத் தொடர்ந்து நேற்றைய ஆட்டத்திலும் தோல்வியுற்றிருந்தால் உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து அந்நாடு வெளியேறும் நிலைமை ஏற்பட்டிருக்கும்.எனினும் ஜெர்மனியின் மார்கோ ரியூஸ் 48-வது நிமிடத்தில் அடித்த கோல் ஜெர்மனிக்கு மீண்டும் உயிர் தந்து அதன் கனவுகளை மீண்டும் தொடரச் செய்தது.

90 நிமிடங்களுக்குப் பின்னரும் இரு குழுக்களும் வேறு கோல்கள் எதுவும் அடிக்காத பட்சத்தில் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கூடுதலாகத் தரப்பட்ட 5-வது நிமிடத்தில் ஜெர்மனியின் டோனி குருஸ் அற்புதமான கோல் ஒன்றை அடித்து ஜெர்மனி விளையாட்டாளர்கள், இரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரளச் செய்தார்.

#TamilSchoolmychoice

2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ‘எஃப்’ பிரிவில் அந்நாடு கொரியாவை எதிர்வரும் ஜூன் 27-ஆம் தேதி சந்திக்கின்றது. அதிலும் வெற்றி பெற்றால் ஜெர்மனி இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் தகுதியைப் பெறும்.