Home உலகம் மாயமான பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி – ஆப்பிள் வாட்ச் உண்மையைக் காட்டுமா?

மாயமான பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி – ஆப்பிள் வாட்ச் உண்மையைக் காட்டுமா?

1111
0
SHARE
Ad
ஜமால் கஷோகி

இஸ்தான்புல் – சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதும் நிருபர். அல்-அராப் தொலைக்காட்சி செய்தி அலைவரிசையின் முதன்மை ஆசிரியராக இருந்தவர்.

துருக்கியில் இவர் இருந்தபோது, தனது துருக்கியக் காதலியை மணப்பது குறித்த ஆவணங்களைப் பெறுவதற்காக கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் நுழைந்தார். அவர் அந்தத் தூதரகத்தில் நுழைந்ததற்கான ஆதாரமாக புகைப்படங்கள் இருக்கின்றனவே தவிர இதுவரையில் அவர் என்ன ஆனார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இதுவரையில் அவர் அந்தத் தூதரகத்தில் இருந்து வெளியே வரவில்லை.

உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் அவர் என்ன ஆனார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றன. உள்ளே கைகலப்புகள் நிகழ்ந்ததாகவும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இப்போது அவரது மறைவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அந்தத் திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பது அவர் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் என்ற கைக்கெடிகாரம்.

ஆப்பிள் வாட்ச் உண்மையைக் காட்டிக் கொடுக்குமா?

தூதரகத்தில் நுழைவதற்கு முன்னால் அவர் தனது கைத்தொலைபேசியை வாசலில் நின்றிருந்த தனது காதலியிடம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். சவுதி அரேபியத் தூதரகத்தில் தனக்கு ஏதாவது நடக்கலாம் என நினைத்தாரோ என்னவோ, ஜமால் கஷோகி உள்ளே நுழையும்போது தான் கட்டியிருந்த ஆப்பிள் வாட்சை திறந்து இயங்க வைத்துவிட்டுத்தான் உள்ளே சென்றிருக்கிறார்.

அவ்வாறு அந்த ஆப்பிள் வாட்ச் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதன் பதிவுகளின் தரவுகள் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கைத்தொலைபேசியில் பதிவாகும் என்பது தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு தெரிந்த ஒன்று.

எனவே, அந்த ஆப்பிள் வாட்சில் பதிந்திருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போது அவரது காதலியிடம் இருக்கும் அவரது கைத்தொலைபேசியிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து ஆராயும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சவுதி அரேபியத் தூதரகத்தினுள் கஷோகிக்கு என்ன நடந்தது என்பது அந்த ஆப்பிள் வாட்ச் மூலம் உலகுக்குத் தெரியவருமா? என ஊடகத்தினர் காத்திருக்கின்றனர்.

கஷோகி சவுதி அரேபியத் தூதரகத்தினுள் கொல்லப்பட்டார் என துருக்கிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாகவும் அதற்கான ஒலி, காணொளி ஆதாரங்கள் இருப்பதாக உறுதிப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்தான் ஆப்பிளின் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்பான ஆப்பிள் வாட்ச்சின் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் கஷோகியின் மரணத்தில் நிலவும் மர்மங்கள் விலகுமா என அகில உலகமும் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.