Home உலகம் ஐரோப்பியத் தலைவர்கள் உக்ரேன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் விடுபடுவோம் என்ற அச்சத்தால் பாரிசில் சந்திப்பு!

ஐரோப்பியத் தலைவர்கள் உக்ரேன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் விடுபடுவோம் என்ற அச்சத்தால் பாரிசில் சந்திப்பு!

189
0
SHARE
Ad

பாரிஸ் : உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா- ரஷிய அதிகாரிகள் சவுதி அரேபியாவில் பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, ஐரோப்பியத் தலைவர்கள் பாரிசில் அவசரக் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா புடினுடன் நெருக்கம் பாராட்டுவதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் ஐரோப்பாவும் உக்ரேனும் விடுபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதைத் தொடர்ந்து ஐரோப்பியத் தலைவர்கள் அமெரிக்காவுக்கும் டிரம்புக்கும் எதிரான வரலாற்றுபூர்வ எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

சவுதி அரேபியப் பேச்சுவார்த்தையின் முக்கியத் திருப்பம் என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் யாரும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கு பெற மாட்டார்கள் என்பதுதான்!.

ஐரோப்பிய நாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நடத்தப்படும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் அமெரிக்க அதிபரின் பிரதிநிதிகளாக ரஷிய அதிகாரிகளைச் சந்திக்க சவுதி அரேபியா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷிய சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும் அதிகாரத்துவம் வாய்ந்த உயர்நிலை அதிகாரிகளை புடின் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் புடினுடன் ஒருமணி நேரம் தொலைபேசி உரையாடல் நடத்தியதாக டொனால் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன் பின்னர் உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வழி பேசியதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்தே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவில் நடைபெறவிருக்கிறது.