Home Photo News மலேசியத் தமிழ் நூல்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய வல்லினம்

மலேசியத் தமிழ் நூல்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய வல்லினம்

1779
0
SHARE
Ad
தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன், தமிழச்சி தங்கபாண்டியனுடன் வல்லினம் ம.நவீன்

சென்னை – எதிர்வரும் நவம்பர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில்  வல்லினம் தனது பத்தாவது கலை இலக்கிய விழாவைப் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுகிறது. மலேசியத் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதிலும், விரிவாக்கம் செய்வதிலும், தமிழகத்திற்கும், மலேசியாவுக்கும் இடையில் தமிழ் இலக்கிய நல்லுறவுகளை வலுப்பெறச் செய்வதிலும், தனக்கென தனிப்பாதை வகுத்துக் கொண்டு செயல்படும் வல்லினம் குழுவினர், தங்களின் 10 ஆண்டுகளின் நிறைவை முன்னிட்டு இவ்வருடம் மட்டும் 10 நூல்களை வெளியீடு செய்கின்றனர். இந்த நூல்கள் நவம்பர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் வல்லினம் பத்தாம் ஆண்டு கலை இலக்கிய விழாவில் வெளியிடப்படவிருக்கின்றன.

அந்த 10 நூல்களில் ஐந்தினை தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் வல்லினம் அறிமுகப்படுத்தி வெளியீடு செய்தது. இதன் மூலம் மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பையும், செழுமையையும், தமிழக மண்ணுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு முயற்சியை வல்லினம் முன்னெடுத்துள்ளது.

ம.நவீன்

இந்த நூல் வெளியீடுகளின் மூலம் தமிழக எழுத்தாளர்களான ஜெயமோகன், சு.வேணுகோபால், இமையம், சுனில் கிருஷ்ணன், பவா செல்லதுரை, இளங்கோ போன்ற ஆளுமைகளின் விமர்சனத்தில் மலேசியாவின் சமகால இலக்கியம் பரவலான தமிழக வாசகர் பரப்புக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

#TamilSchoolmychoice

ஜீவ கரிகாலன் பொறுப்பில் தமிழ் நாட்டில் இயங்கும் ‘யாவரும்’ எனும் பதிப்பகத்தின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இந்த வெளியீடுகளில் மலேசிய எழுத்தாளர்களான ம.நவீன், மா.சண்முகசிவா, சரவண தீர்த்தா, விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டதுடன் மலேசிய இலக்கியம் குறித்த அறிமுகத்தையும் தத்தம் ஏற்புரையில் வழங்கினர்.

தமிழகத்தில் வெளியீடு கண்ட இந்த நூல்கள் நவம்பர் 18-இல் நடைபெற உள்ள வல்லினம் கலை இலக்கிய விழாவின்போது மலேசியாவிலும் அறிமுகம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் மா.சண்முக சிவா
தமிழக எழுத்தாளர் இளங்கோ
தமிழக எழுத்தாளர் இமையம்
தமிழகத்தின் ‘யாவரும்’ பதிப்பகத்தின் ஜீவ கரிகாலன்
மலேசிய எழுத்தாளர் சரவண தீர்த்தா
தமிழக எழுத்தாளர் சு.வேணுகோபால்
தமிழக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்
மலேசிய எழுத்தாளர் விஜயலெட்சுமி