Home இந்தியா 18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

2159
0
SHARE
Ad

சென்னை – தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி உறுதிப்படுத்தி இன்று வியாழக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

தமிழக சட்டமன்ற அவைத் தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் ஒரு நீதிபதி ஆதரவாகவும் மற்றொரு நீதிபதி அந்தத் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பளித்தனர். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நியமித்த மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணா இன்று தனது தீர்ப்பை வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும் என்ற அவரது இந்தப் பரபரப்பான தீர்ப்பைத் தொடர்ந்து ஏற்கனவே காலியாக இருக்கும் 2 சட்டமன்றத் தொகுதிகளுடன் சேர்ந்து தற்போது 20 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி உள்ளன. இந்த 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, விரைவில் இந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தும் 20 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பதால், அங்கு மக்களின் பிரதிநிதித்துவம் நிலைநிறுத்தப்படவும், அவர்களுக்கான சேவைகள் தொடரவும் உடனடியாக இடைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளன.

நடைபெறும் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் அதிமுக போட்டியிட்டு வெல்லும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக வட்டாரங்களில் இந்த சாதகமான முடிவைத் தொடர்ந்து எங்கும் குதூகலமும் கொண்டாட்டமும் காணப்பட்டன.

தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளில் தற்போது 20 தொகுதிகள் காலியாக இருப்பதால் மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போதைக்கு 214 மட்டுமே ஆகும். இதில் 107 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அதிமுக ஆட்சி தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்ற நிலையில் அதிமுகவுக்கு தற்போது 109 உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர்.

20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால், அதிமுக தொடர்ந்து ஆட்சியில் நிலைத்திருக்க முடியும். அப்படியே இடைத் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், அதில் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் வென்றால் கூட போதும், அதிமுக தொடர்ந்து சட்டமன்றப் பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.