Home அரசியல் வேதமூர்த்தி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்!

வேதமூர்த்தி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்!

807
0
SHARE
Ad

Waythamoorthy---Feature-2

கோலாலம்பூர், ஏப்ரல் 1 – மலேசிய இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக ஹிண்ட்ராப் முன்மொழிந்துள்ள ஐந்தாண்டு திட்ட வரைவினை தேசிய முன்னணி அல்லது மக்கள் கூட்டணி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கடந்த 21 நாட்களாக, ரவாங்கிலுள்ள அருள்மிகு அகோர வீரபத்திரர் சங்கிலி கருப்பர் ஆலயத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 4 மணியளவில் வேதமூர்த்தியின் உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்த காரணத்தால், அவர் ஜாலான் ஈப்போவிலுள்ள டாமாய் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சர்க்கரை அளவு குறைந்திருப்பது, உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் அவரது உடல் நிலை மோசமடைந்திருப்பதாக கூறினர். அதன் பிறகு நடந்த சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு வேதமூர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து, ஹிண்ட்ராப் ஆதரவாளர்களை சந்திக்க விரும்பிய வேதமூர்த்தி, மருத்துவமனையிலிருந்து மீண்டும் சங்கிலி கருப்பர் ஆலயத்திற்கு வந்து சுமார் 700 ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள்  முன்னிலையில், மேற்கொண்டு தான் என்ன செய்ய வேண்டுமென்று ஆலோசித்தார்.

ஹிண்ட்ராப் ஆதரவாளர்  அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அவரை கேட்டுக்கொண்டதால், இறுதியாக ஆதரவாளர்களின் வேண்டுதலை ஏற்று தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக வேதமூர்த்தி அறிவித்தார்.

பிரதமர்  நஜிபுடன் இரண்டாவது சந்திப்பு

பிரதமர் நஜிப்புக்கும், ஹிண்ட்ராப் இயக்கத்திற்கும் இடையிலான சந்திப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் இலாகாவில் நடந்தேறியது. அச்சந்திப்பில் பிரதமர் நஜிப் ஹிண்ட்ராப் முன்மொழிந்துள்ள ஐந்தாண்டு திட்ட வரைவினை குறித்து மேலும் சில பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பதாக உறுதியளித்தார்.

எனவே இன்னும் சில நாட்களில் பிரதமர்  நஜிபுடன் இரண்டாவது சந்திப்பு நடைபெறவிருப்பதாக  ஹிண்ட்ராப்பின் தேசிய ஆலோசகர் என்.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.