Home இந்தியா “தமிழ் ஆய்வுலகுக்கு பேரிழப்பு” அறவாணனின் மாணவர் மு.இளங்கோவன் உருக்கம்

“தமிழ் ஆய்வுலகுக்கு பேரிழப்பு” அறவாணனின் மாணவர் மு.இளங்கோவன் உருக்கம்

1028
0
SHARE
Ad
பேராசிரியர் க.ப.அறவாணன்

புதுச்சேரி- (இன்று அதிகாலை சென்னையில் காலமான தமிழறிஞர் பேராசிரியர் க.ப.அறவாணன் குறித்து புதுவையைச் சேர்ந்த அவரது மாணவர்களில் ஒருவரான முனைவர் மு.இளங்கோவன் தனது வலைத்தளத்தில் தனது இரங்கலையும், அறவாணன் குறித்த கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவை செல்லியல் வாசகர்களுக்காக இங்கே மறுபதிவேற்றம் செய்கிறோம்)

“புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் முன்னைத் தலைவரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னைத் துணை வேந்தரும், தமிழின முன்னேற்றம் குறித்து நாளும் சிந்தித்தவருமான எங்களின் அருமைப் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் 23.12.2018(ஞாயிறு) விடியற்காலை 5 மணிக்குச் சென்னை அமைந்தகரையில் உள்ள அவர்தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

Elangovan Mu Puthucheri-Feature
கட்டுரையாளர் முனைவர் மு.இளங்கோவன்

பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்களின் அன்பிற்குரிய மாணவனாக 1992-93 ஆம் ஆண்டுகளில் அவரிடம் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளேன். அவரின் வகுப்பறையில் சிற்றூர்ப்புற மாணவனாக நுழைந்த நான், புதுமையை விரும்பும் மாணவனாகவும் உலகப் பார்வை கொண்ட ஆய்வாளனாகவும் மலர்ந்து, அவர் வழியில் இன்றுவரை உழைத்துவருகின்றேன். என் நூல் வெளியீட்டு விழாவுக்கும் (1995), என் திருமணத்திற்கும் (2002) பேராசிரியர் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்து பெருமை சேர்த்துள்ளார்கள். என்னைப் போலும் பல்லாயிரம் மாணவர்கள் அவரால் அறிவுத்தெளிவும், உதவியும் பெற்று, வாழ்க்கையில் முன்னேறியுள்ளோம்.

#TamilSchoolmychoice

பேராசிரியர் க.ப.அறவாணன் 09.08.1941 இல் தஞ்சை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவர். பெற்றோர் பெயர் பழநியப்பன், தங்கப்பாப்பு அம்மையார். க.ப. அறவாணனின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி எனவும், அருணாசலம் எனவும் அமைந்திருந்தன. பின்னாளில் அறவாணன் என்று மாற்றிக்கொண்டார். பிறந்த ஊரில் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்றவர். அருகில் உள்ள விஷ்ணுபுரம் என்ற ஊரில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் (1959) பட்டத்திற்கும், பி.ஒ.எல் (1963) பட்டத்திற்கும் பயின்றவர். முதுகலைப் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் (1965-1967) பயின்றவர்.

21.04.1969 இல் பேராசிரியர் தாயம்மாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டு இவர்களின் இல்லறப் பயனாய் அறிவாளன், அருள்செங்கோர் என்னும் இரு மக்கட் செல்வங்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றவர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தம் ஆசிரியப் பணியைத் தொடங்கி, பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வர் பணி ஏற்றவர்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர் (1970). தென்னாப்பிரிக்கா – செனகால் நாட்டுத் தக்கார் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் ஆய்வாளராக 1977-82 வரை பணிபுரிந்தவர். 1982 முதல் 1987 வரை சென்னை இலயோலா கல்லூரியிலும், 1987 முதல் , புதுவைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1998-2001 வரை துணைவேந்தராகப் பணிபுரிந்தவர். இவர்தம் பணிக்காலத்தில் சமுதாயவியல் கல்லூரி என்பதை நிறுவி, அடித்தட்டு நிலையில் உள்ள மாணவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெருமைக்குரியவர்.

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் என்ற அமைப்பு தொய்வுற்று இருந்த நிலையில் அதனை மிகப்பெரிய நிலைக்கு உயர்த்தி, தமிழாய்வுகள் சிறக்க வழிசெய்தவர். அறிவியல் தமிழியம், தேடல், முடியும், கொங்கு உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராக இருந்து நடத்தியவர்.

மூத்த பேராசிரியர்கள் வ.ஐ.சுப்பிரமணியம், ச.வே.சுப்பிரமணியன் ஆகியோரின் அன்பிற்குரிய மாணவராகத் திகழ்ந்தவர். அவர்களின் வழியில் கடுமையாக உழைத்து வாழ்வின் உயர்நிலையை அடைந்தவர். அறுபதிற்கும் மேற்பட்ட அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டவர். சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு, படைப்பு இலக்கியம் என்பன இவர் பங்களித்துள்ள துறைகளாகும். தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை, தொல்காப்பியக் களஞ்சியம், கவிதை கிழக்கும் மேற்கும், அற்றைய நாள் காதலும் வீரமும், தமிழரின் தாயகம், தமிழ்ச் சமுதாய வரலாறு, தமிழ் மக்கள் வரலாறு, அற இலக்கியக் களஞ்சியம் என்பன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும். இவரின் படைப்பு நூல்களாக “அவள் அவன் அது’, “தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும்”. “செதுக்காத சிற்பங்கள்”, “சொல்ல முடிந்த சோகங்கள்”, “நல்லவங்க இன்னும் இருக்காங்க”, “கண்ணீரில் மிதக்கும் கதைகள்” என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழ்நாட்டரசின் திருவள்ளுவர் விருது, தமிழர் தந்தை சி.ப. ஆதித்தனார் இலக்கியப் பரிசு உள்ளிட்ட விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர். உலக நாடுகளுக்குப் பயணம் செய்து தமிழ், தமிழர் குறித்து உரையாற்றிய சிறப்பிற்குரியவர்.

பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் மறைவு தமிழ் ஆய்வுலகிற்குப் பேரிழப்பாகும்.

முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்!

முடிந்தால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்!

இயன்றால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்!

என்ற கொள்கையுறுதியுடன் வாழ்ந்துகாட்டியவர் க.ப.அறவாணன்.