Home இந்தியா தூய்மை நகர பட்டியலில் திருச்சிக்கு 4-வது இடம், முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு!

தூய்மை நகர பட்டியலில் திருச்சிக்கு 4-வது இடம், முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு!

1202
0
SHARE
Ad

திருச்சி: இந்தியாவின் மத்திய வீட்டுவசதி மற்றம் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டு தோறும் தூய்மை நகரங்களைப் பட்டியலிட்டு அறிவித்து வருகிறது. இந்த நடைமுறை, தூய்மை இந்தியா எனும் திட்டத்தின் கீழ் இடம் பெறுகிறது. நாடெங்கிலும் உள்ள நகரங்களின் தூய்மை குறித்து, மக்களிடம் இணையம் மூலம் கருத்து கேட்பு நடத்தி வரப்படுகிறது.

இம்முறை, தூய்மை நகரங்கள் தொடர்பாக பொதுமக்களிடையே நடத்தி வந்த கருத்து கேட்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி மாநகரம் நான்காவது இடத்தில் இடம்பெற்று வருகிறது.

தூய்மை நகரங்கள் பட்டியலில் 2015-ஆம் ஆண்டில் 14.25 புள்ளிகளில், திருச்சி மாநகரம் 2-வது இடத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. பின்பு, 2016-ஆம் ஆண்டு 3-வது இடத்திலும், 2017-ஆம் ஆண்டு 6-வது இடத்திலும், கடந்த ஆண்டு 13-வது இடத்திலும் இடம்பெற்றது. மக்களின் கருத்து கேட்புக்கான மதிப்பெண்கள் பெறுவதில் சரிவுக் கண்டதால் இந்நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதனைச் சரிப்படுத்தும் வகையில், அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, செயலி ஒன்றை திருச்சி மாநகராட்சி அறிமுகம் செய்தது. மேலும், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து தளங்களிலும் இது குறித்த விபரங்களைப் பதிவிட்டு, பரவலாக மக்கள் வாக்களிக்கப்பதற்கு ஊக்கம் கொடுத்தும் வருகிறது.

ஜனவரி 17-ஆம் தேதி வரையிலான புள்ளி விபரங்கள்படி ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது.  இவ்வாண்டு திருச்சி மாநகரை தூய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் கொண்டு வருவதற்கான பணிகள் செவ்வனே நடைபெற்று வருவதாக திருச்சி மாநகராட்சியின் தனி அலுவலரும், ஆணையருமான ந. ரவிச்சந்திரன் கூறினார். திருச்சி நகரை தூய்மையாக வைத்திருப்பதில் மாநகராட்சி விட, மக்கள் அதிகம் அக்கறைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.