பத்துமலை வளாகத்தை வந்தடைந்த அவரை ஆலய நிர்வாகத்தினரும், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் வரவேற்றனர். பத்துமலை வளாகத்தைச் சுற்றி வந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகளைப் பார்வையிட்டதோடு, அங்குள்ள பொதுமக்களோடும் நஜிப் அளவளாவினார்.
அவரது வருகையைத் தொடர்ந்து பத்துமலை வளாகத்தில் அவர் இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதோடு, மக்களிடையே பேசப்படும் ஒரு விவாதமாகவும் அவரது வருகை உருமாறியது.
அதற்கேற்ப, தனக்கு எதிரான வழக்குகள் ஒருபுறம் தனக்கு நெருக்கடியைத் தந்தாலும், தொடர்ந்து அவர் மக்கள் மன்றங்களில் துணிச்சலுடன் கலந்து கொள்வதும், தனது கருத்துகளைப் பகிரங்கமாக வெளியிடுவதும், அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த முறை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி ஆகியோர் பத்துமலை தைப்பூசத்திற்கு வருகை தந்தனர். ஆனால் பிரதமர், (மகாதீர் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கிறார்) துணைப் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளாத பட்சத்தில் நஜிப்பின் தைப்பூச வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே கூற வேண்டும்.
நஜிப்பின் பத்துமலை தைப்பூச வருகையின்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்: