Home நாடு தேசிய முன்னணி நீடித்திருக்கும், பங்காளிகள் உறுதி!

தேசிய முன்னணி நீடித்திருக்கும், பங்காளிகள் உறுதி!

989
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக, தேசிய முன்னணி கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளின் உயர்மட்டக் குழு சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை புத்ரா வணிக மையத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்புக் கூட்டத்தை அம்னோ கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட் ஹசான் தலைமையேற்றார். மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மற்றும் மசீச தலைவர் வீ கா சியோங் ஆகியோர் உட்பட பங்காளிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

மீண்டும் தேசிய முன்னணியை கலைக்கும் பரிந்துரையை மசீச கட்சித் தலைவர் வீ கா சியோங் முன்வைத்ததாக முகமட் ஹசான் கூறினார். ஆயினும், அந்த பரிந்துரைக்கு அம்னோவும் மஇகாவும் ஒத்துழைக்கவில்லை என அவர் தெரிவித்தார். தேசிய முன்னணி கூட்டணி இன்னும் பலமாக உள்ளது என முகமட் ஹசான் குறிப்பிட்டார். மேலும், மஇகா மற்றும் மசீச கட்சிகளின் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்த விவகாரங்களை ஆராயும் எனவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் பதவியில் தெங்கு அட்னான் தொடர்ந்து நிலைத்திருப்பார் எனவும், நஸ்ரியின் நியமனம் அக்கூட்டணியின் உயர்மட்டக் குழுவில் ஏற்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்புக் கூட்டத்தில் நஸ்ரி கலந்துக் கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

நேற்று வியாழக்கிழமை நடந்து முடிந்த அம்னோ உயர்மட்டக் குழு கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஹசான், மஇகா மற்றும் மசீச கட்சிகள், தேசிய முன்னணியின் மீது இன்னும் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகவும், அதன் வரலாற்றை மதிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து மஇகா, இன்று மாலை தனது மத்திய செயற்குழுக் கூட்டத்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.