Home நாடு ஸ்ரீ லலிதாலயா இசைக் கல்லூரியின் 3-ஆவது வீணை பட்டமளிப்பு விழா

ஸ்ரீ லலிதாலயா இசைக் கல்லூரியின் 3-ஆவது வீணை பட்டமளிப்பு விழா

1143
0
SHARE
Ad

சுபாங் ஜெயா – ஸ்ரீ லலிதாலயா இசைக் கல்லூரி 2008 ஆம் ஆண்டு குரு, திரு பிரகாஷ் நம்பியார் பிரபாகரன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. பிரகாஷ் நம்பியார் அவர்கள், இசைப் பேரொளி சுஜாதா மேனன் அவர்களின் மாணவராவார்.

ஸ்ரீ லலிதாலயா இசைக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா, 2013 ஆம் ஆண்டிலும் இரண்டாவது பட்டமளிப்பு விழா 2016 ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விரண்டு விழாவிலும் மொத்தம் 32 வீணை மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய ஒன்று.

ஸ்ரீ லலிதாலயா இசைக்கல்லூரி, கடந்த 11 ஆண்டு காலம் செயல்பட்டு வருகிறது. தற்போது மூன்றாவது முறையாகப் பட்டமளிப்பு விழா எற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 3-ஆவது பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் 30 மார்ச் 2019 –ஆம் நாள் (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு, சுபாங் ஜெயா. சீ வென் சீனப்பள்ளியில் அமைந்துள்ள லிம் பீ அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இம்முறை, 16 இளம் நிலை மாணவர்களும் 3 முதுநிலை மாணவர்களும் பட்டம் பெறவுள்ளனர்.

#TamilSchoolmychoice

பிரகாஷ் நம்பியார் அவர்கள் காஜாங் உச்சிப் பிள்ளையார் கோயில், ரவாங், பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ், ஷா ஆலாம் ஐ- சிடி , கிள்ளான் பண்டார் புத்திரி அருள் நுண்கலைப் பள்ளி ஆகிய இடங்களில் வீணை வகுப்புகள் நடத்தி வருகிறார். இவ்வனைத்து இடங்களிலும் பயிலும் மாணவர்களும் ஒருசேர இம்முறை பட்டம் பெறவுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இப்பட்டமளிப்பு விழாவின் போது ஸ்ரீ லலிதாலயா இசைக் கல்லூரியைச் சேர்ந்த 7 மூத்த மாணவர்கள், வீணை ஆசிரியராக அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர்.

இன்றைய அவசர வாழ்க்கையில் சிறியவர் முதல் பெரியவர் வரை மன அழுத்தத்திற்கு ஆளாகி வந்து கொண்டிருக்கும் வேளையில், இது போன்ற இசை நிகழ்ச்சிகள் நம் மனதிற்கு அமைதியைத் தந்து உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரவல்லது. எனவே இசை ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வந்து பட்டம் பெறவுள்ள இளம் வீணை கலைஞர்களின் இன்னிசையைக் கேட்டுச் சுவைத்து மகிழ்ந்து செல்லுமாறு ஸ்ரீ லலிதாலயா இசைக் கல்லூரியின் தோற்றுனர் பிரகாஷ் நம்பியார் பிரபாகரன் அவர்கள் மனமுவந்து உங்கள் அனைவரையும் அழைக்கிறார்.

இது ஓர் இலவச நிகழ்ச்சியாகும்.

தொடர்புக்கு :- பிரகாஷ் நம்பியார் பிரபாகரன் –  012-2703222