கோலாலம்பூர், கேஎல்சிசி மாநாட்டு அரங்கத்தில் மே திங்கள் 2 முதல் 4-ஆம் நாள் வரை மூன்று நாட்களில் நடைபெற்ற இந்த பன்னாட்டு புத்தாக்க தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக் கண்காட்சியில் 25 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 70 குழுவினர் கலந்து கொண்டு 31 தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்தனர்.
இந்த ஆண்டு கண்காட்சியில் 20 நாடுகளைச் சேர்ந்த இளம் மாணவர்கள் கலந்து கொண்ட வேளையில் காஜாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.
இதில் புறநகர்ப் பகுதியான தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை வாகை சூடியது குறிப்பிடத்தக்கது. இந்தப் பள்ளி மாணவர்கள், அலுமினியக் கலன் அழுத்தும் கருவி (DACC)-க்கான கண்டு பிடிப்பில் ஈடுபட்டனர்.
இவ்வாண்டு பன்னாட்டு புத்தாக்க தொழில்நுட்பக் கண்காட்சியில், நம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இந்த அளவிற்கு சாதனைப் படைப்பதற்காக இரவு பகல் பாராமல் ஓய்வைக் கருதாமல் பாடுபட்ட ஆசிரியப் பெருமக்களும் உறுதுணையாக இருந்த பெற்றோரும் பாராட்டிற்கு உரியவர்கள் என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.