Home வணிகம்/தொழில் நுட்பம் டிரம்ப் மிரட்டலால் மலேசிய – ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு

டிரம்ப் மிரட்டலால் மலேசிய – ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு

853
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சீனாவுக்கு எதிராக தொடர்ந்து கடும் வணிக மிரட்டல்களை விடுத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவின் இறக்குமதிப் பொருட்களுக்கான வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என புதிய மிரட்டல் ஒன்றை விடுத்ததைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை மலேசிய பங்குச் சந்தையும், ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சி கண்டன.

பிற்பகல் 12.30 மணியளவில் கோலாலம்பூர் பங்குச் சந்தையின் ஒருங்கிணைந்த குறியீடு 11.34 புள்ளிகள் சரிந்து 1,625.96 புள்ளிகளாக இருந்தது.

ஹாங்காங்கின் ஹங் செங் பங்குச் சந்தையும், சீனாவின் ஷங்காய் பங்குச் சந்தையும் வீழ்ச்சி கண்ட வேளையில் சிங்கப்பூரின் பங்குச் சந்தையும் 3.58 விழுக்காடு சரிவு கண்டது. அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாக இது பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஜாகர்த்தாவின் பங்குச் சந்தையும் 1.13 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் வணிகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் வேளையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவின் 200 பில்லியன் டாலர் மதிப்புடைய இறக்குமதிப் பொருட்களுக்கு நடப்பிலிருக்கும் 10 விழுக்காடு வரிவிதிப்பு 25 விழுக்காடாக உயர்த்தப்படும் என டிரம்ப் மிரட்டியிருக்கிறார்.

இதன் காரணமாக, சீனா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றதாகலாம் என்பதோடு, பாதிப்பும் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.