Home உலகம் கப்பலை விடுவிக்காவிட்டால் ‘அதிவேக’ பதிலடி – எச்சரிக்கிறது பிரிட்டன்

கப்பலை விடுவிக்காவிட்டால் ‘அதிவேக’ பதிலடி – எச்சரிக்கிறது பிரிட்டன்

1089
0
SHARE
Ad

இலண்டன் – பிரிட்டனின் கொடியை ஏந்திய ஸ்டெனா இம்பெரோ (Stena Impero) என்ற எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்காவிட்டால் ஈரானுக்கு அதிவேக பதிலடி கொடுக்கப்படும் என பிரிட்டன் எச்சரித்துள்ளது.

அதே வேளையில் அமெரிக்கா தனது இராணுவத் துருப்புகளை சவுதி அரேபியாவில் நிறுத்தி வைக்கும் முடிவுக்கு சவுதி அரேபியாவின் ஆட்சியாளர் மன்னர் சல்மான் அனுமதி அளித்திருக்கிறார்.

ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றத்திற்கு பிரிட்டன் அனுப்பிய கடிதத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் முறையாக, சட்டரீதியாக அனைத்துலகக் கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தது என்றும் எனவே ஈரான் அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

#TamilSchoolmychoice

பிரிட்டன் என்ன பதிலடி எடுக்கப் போகிறது? அமெரிக்கத் துருப்புகள் ஈரானுக்கு எதிராக களமிறங்குமா? அமெரிக்கா, பிரிட்டன் இணைந்து தாக்குதல் நடத்தி சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலை விடுவிக்குமா? என்பது போன்ற கேள்விகளால் அனைத்துலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டெனா இம்பெரோ (Stena Impero) என்ற பெயர் கொண்ட அந்த எண்ணெய் கப்பல் ஹோர்முஸ் (Hormuz) நீரிணையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ‘அனைத்துலக விதிகளை மீறியதற்காக’ கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 19) சிறைப்பிடிக்கப்பட்டதாக ஈரான் அறிவித்திருக்கிறது.

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இந்த விவகாரத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாகத் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தன.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அண்மைய வாரங்களில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையில் பதட்டம் அதிகரித்து வருகிறது.

ஹோர்முஸ் நீரிணை என்பது மத்திய கிழக்கு நாடுகள் தங்களின் எண்ணெய் வளங்களைக் கடல் மூலமாக உலகின் மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்ல உதவும் ஒரே கடல் வழிப் பாதையாகும்.

பெர்சியன் வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா இரண்டையும் இணைக்கும் இந்தக் குறுகிய நீரிணை சுமார் 21 மைல்கள் மட்டுமே அகலம் கொண்ட கடல் பகுதியாகும். பெர்சியன் வளைகுடாவைச் சுற்றியிருக்கும் எண்ணெய் வள நாடுகள் தங்களின் ஏற்றுமதிகளை இந்தக் கடல்பகுதியாகவே உலக நாடுகளுக்கு அனுப்பி வருகின்றன. எனினும் இந்தக் கடல்பகுதி ஈரானின் கடல் எல்லைக்குள் இருப்பதால் ஈரான், தனது ஆதிக்கத்தையும், வலிமையையும் காட்ட இந்தப் பகுதியில் செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தி வருகிறது.