Home One Line P2 பிக் பாஸ் 3 : சேரன் வெளியேற்றப்பட்டார் – மீண்டும் இரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்

பிக் பாஸ் 3 : சேரன் வெளியேற்றப்பட்டார் – மீண்டும் இரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்

3005
0
SHARE
Ad

சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) இரவு ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் சேரன் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

எனினும், அவர் மீண்டும் நிகழ்ச்சியில் தொடர்வதாகக் கூறிய பிக்பாஸ் சேரனை இரகசிய அறைக்குள் அனுப்பி வைத்தார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு மூன்று பேர் மீண்டும் விருந்தினர்களாக திரும்பவும் வந்து சேர்ந்தனர். பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரங்களில் வெளியேற்றப்பட்ட அபிராமி, மோகன் வைத்யா, சாக்‌ஷி ஆகிய மூவரும் மீண்டும் விருந்தினர்களாக ஒருவாரம் பிக் பாஸ் வீட்டில் தங்க வைக்க அனுமதிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

ஒருவாரம் விருந்தினர்களாகத் தங்கியிருந்த அந்த மூவரும் சனிக்கிழமை நிகழ்ச்சியோடு பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறினர். அவர்களை மேடைக்கு அழைத்து கமல்ஹாசன் அவர்களோடு கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களில் ஐவர் இந்த வாரம் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். முகேன், ஷெரின், சேரன், லோஸ்லியா, கவின் ஆகியோரே அந்த ஐவராவர்.

முதலில் காப்பாற்றப்படுவது யார் என அறிவித்த கமல்ஹாசன் தன்னம்பிக்கையோடு நான் வெளியேற மாட்டேன் எனக் கூறிய முகேன் காப்பாற்றப்படுவதாக அறிவித்தார். அடுத்து இரண்டாவதாக ஷெரின் காப்பாற்றப்படுவதாகவும், அதைத் தொடர்ந்து கவினும் காப்பாற்றப்படுவதாகவும் கமல் அறிவித்தார்.

இறுதியில் எஞ்சியிருந்தது லோஸ்லியாவும், சேரனும்தான்! அவர்களில் சேரன் வெளியேற்றப்படுகிறார் என அட்டையைக் காட்டிக் கூறிய கமல் அவரை வெளியே வருமாறு அழைத்தார்.

அனைவரும் கண்ணீருடன் சேரனுக்கு விடைகொடுக்க, லோஸ்லியா சேரனைக் கட்டிப் பிடித்து அழுதார். வனிதாவோ, இந்த முடிவே தவறானது, எல்லாமே தவறாக இருக்கிறது, இரசிகர்கள் தவறாக முடிவு செய்கிறார்கள் என கன்னபின்னாவென்று திட்டினார்.

மேடைக்கு வந்த சேரனோடு சக பங்கேற்பாளர்கள் உரையாடினர். பலர் கண்ணீர் விட்டு அழுதனர். எல்லாம் முடிந்த பிறகு உங்களுக்கான குறும்படம் காட்டப்படும் என சேரனிடம் கமல் கூறியபோது, பிக்பாஸ் குறுக்கிட்டு ஒரு முக்கிய அறிவிப்பு என அறிவித்தார்.

சேரன் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் வண்ணம் இரகசிய அறைக்குள் அனுப்பப்படுகிறார் என பிக்பாஸ் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து சேரன் குறித்த குறும்படம் காட்டப்படவில்லை. இரகசிய அறைக்குள் சேரன் செல்வது மற்ற பங்கேற்பாளர்களுக்குத் தெரியாது. இனி இரகசிய அறையில் இருந்து சேரன் பிக்பாஸ் வீட்டில் நடப்பதை பார்க்க முடியும். ஆனால் மற்ற பங்கேற்பாளர்களைப் பொறுத்தவரை சேரன் வெளியேறி விட்டார் என்றே அவர்கள் கருதிக் கொண்டிருக்கின்றனர்.