கடந்த வாரம் முழுவதும் நடத்தப்பட்ட கடினமான போட்டிகளால், முதுகுப் பிடிப்பு, உடல்வலிகளால் சேரன் அவதிப்பட்டு வந்த காரணங்களுக்காக அவர் வெளியேற்றப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட சக பங்கேற்பாளர்களால் நால்வர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இயக்குநர் சேரன், லோஸ்லியா, கவின், ஷெரின் ஆகியோரே அந்த நால்வராவர்.
சனிக்கிழமை நிகழ்ச்சியில் நால்வரில் காப்பாற்றப்படப் போவது யார் என்பதைக் கூறாமலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார். நேற்றைய ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் முதலில் ஷெரின் காப்பாற்றப்படுவதாக அறிவித்த கமல், பின்னர் இரண்டாவது நபராக கவின் காப்பாற்றப்படுவதாகத் தெரிவித்தார்.
அதன்பின்னர், சேரன், லோஸ்லியா இருவரையும் தனியாக பக்கத்தில் நடவடிக்கை அறைக்கு (activity room) அனுப்பி வைத்த கமல் அங்கிருந்து சேரன் வெளியேற்றப்பட்ட இரசிகர்கள் முடிவு செய்திருப்பதாகவும், லோஸ்லியா மீண்டும் பிக்பாஸ் இல்லத்தில் தொடர்வார் என்றும் கமல் அறிவிக்க, பிக் பாஸ் இல்லத்தில் லோஸ்லியா மீண்டும் நுழைந்தார்.
பின்னர் சேரனை மேடைக்கு அழைத்து கமல் அவரிடம் கலந்துரையாடினார்.
இறுதிச் சுற்றில் முதல் பங்கேற்பாளராகத் தேர்வு பெற்ற முகேன்
மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக மலேசியர் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் முகேன் கடுமையான போட்டிகளுக்கிடையில், உலகம் எங்கும் உள்ள இரசிகர்களாலும், தமிழக இரசிகர்களாலும் இதுவரையில் வெளியேற்றப்படாமல் ஆதரவு பெற்றிருப்பதோடு, தற்போது இறுதிச் சுற்றுக்கும் தேர்வு பெற்று சாதனை புரிந்துள்ளார்.