கோலாலம்பூர் – கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த முன்னாள் பிரதமர் நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ஊழல் வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிவுற்ற நிலையில், தற்காப்பு வாதம் புரிவதற்காக அழைக்கப்படும் அளவுக்கு நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா என்ற தீர்ப்பை இன்று திங்கட்கிழமை காலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கவிருக்கிறது.
நஜிப் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அரசாங்கத் தரப்பு நிரூபிக்கவில்லை என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்யலாம்.
அல்லது அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமாயிருக்கின்றன என்று கூறி அவர் தனது தனது தற்காப்பு வாதங்களை முன்வைக்க அழைக்கப்படலாம்.
அல்லது, சில குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபணமாயிருக்கின்றன என்று கூறி அந்தக் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை மட்டும் தற்காக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்படலாம்.
நஜிப்பின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் தீர்ப்பு இன்று காலை நீதிமன்றம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
