
கோயம்புத்தூர் – (மலேசிய நேரம் இரவு 11.35) இங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி (இந்திய நேரம்) தொடங்கி நடைபெற்ற ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 7 பாடல் திறன் போட்டியில் முதல் நிலை வெற்றியாளராக முருகன் வெற்றி பெற்றார்.
சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் அறிவிப்பாளராகப் பணியாற்றிய ம.கா.பா போட்டிகளின் தொடக்கத்தில் ஒரு பாடலுக்கு மூக்குத்தி அணிந்து வந்த முருகனை ‘மூக்குத்தி முருகன்’ என்றழைக்க, பின்னர் நிகழ்ச்சி முழுக்க அதுவே முருகனின் பெயராகப் புகழ் பெற்றுவிட்டது.
சூப்பர் சிங்கர் வெற்றியாளரானதன் மூலம் 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை முருகன் பெறுகிறார்.
இறுதிச் சுற்றுக்கு வந்த 5 பாடகர்கள் பின்வருமாறு:
- விக்ரம்
- புண்ணியா
- முருகன்
- கௌதம்
- சாம் விஷால்

இரண்டாவது இடத்தை விக்ரம் பெற்றார். சங்கீத ஆலாபனைகளைச் சிறந்த முறையில் விக்ரம் வழங்கியிருந்தாலும் அவரால் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.


மூன்றாவது இடத்தை சாம் விஷால் – புண்ணியா இருவரும் பகிர்ந்து கொண்டனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட புண்ணியா இலண்டனில் இருந்து வந்து சூப்பர் சிங்கர் 7 போட்டிகளில் கலந்து கொண்டு இறுதிச் சுற்று வரை வந்து சாதனை படைத்துள்ளார்.

இறுதிச் சுற்றுக்கு வந்த போட்டியாளர்களில் சிறந்த பாடகர்களை நீதிபதிகள் நேரடியாகவும், இரசிகர்கள் இணையம் வழியாகவும் தேர்வு செய்தனர்.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மலேசியரான முகேன் ராவும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டதோடு அனிருத்துடன் ஒரு பாடலையும், மற்றொரு பாடலையும் பாடி இரசிகர்களை மகிழ்வித்தார்.