Home One Line P1 தோபுவான் மறைவுக்கு தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் கே.ஆர்.சோமா இரங்கல்

தோபுவான் மறைவுக்கு தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் கே.ஆர்.சோமா இரங்கல்

790
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தைத் தோற்றுவித்த தலைவர் துன் வீ.தி.சம்பந்தனின் துணைவியாரும், கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவருமான தோ புவான் உமா சம்பந்தன் மறைவுக்கு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அந்த சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

“1979-இல் துன் சம்பந்தன் மறைந்து ஓராண்டுக்குப் பின் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்தல் மூலம் தோ புவான் தேர்ந்தெடுக்கப்பட்டு 15 ஆண்டுகளாக செயல்பட்டார். கூட்டுறவு சங்க வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கூட்டுறவு சங்கத்திற்கு உறுப்பினர்களை சேர்ப்பதில் முனைப்பு காட்டினார். தொடக்க காலத்தில் கூட்டுறவு சங்க பிரச்சாரக் கூட்டங்களில் துன் சம்பந்தனுடன் தோ புவானும் கலந்து கொள்வார்” என்றும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா (படம்) தனது இரங்கல் செய்தியில் நினைவு கூர்ந்தார்.

“மலேசிய வரலாற்றில் இடம்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற வகையிலும் தேசிய நீரோட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் என்ற அடிப்படையிலும் தோ புவான் உமா சம்பந்தன் அவர்களின் பெயர் மலேசிய இந்திய சமுதாயத்திலும் தேசிய அளவிலும் என்றும் நிலைத்திருக்கும். தொண்ணூறு வயதை எட்டிய நிலையில் முதுமையின் காரணமாக இயற்கை எய்திய அவருக்கும் அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் மீண்டும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என டான்ஸ்ரீ சோமசுந்தரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.