Home One Line P1 குடி போதையில் வாகனம் செலுத்துவோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

குடி போதையில் வாகனம் செலுத்துவோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

619
0
SHARE
Ad

கோலாலம்பூர்: குடி போதை அல்லது போதைபொருள் உட்கொண்டு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு அல்லது மரணங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் (சட்டத்துறை) டத்தோ லியூ வுய் கியோங் தெரிவித்தார்.

இவ்வாறான குற்றத்தைச் செய்யும் ஓட்டுநர்களுக்கு இன்னும் கடுமையான அபராதம் விதிக்க போக்குவரத்து அமைச்சின் பரிந்துரையுடன் அமைச்சரவை கொள்கை அடிப்படையில் உடன்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

“அமைச்சரவையில் சட்ட நடவடிக்கை எடுக்க நான் அதை போக்குவரத்து அமைச்சுக்கு சமர்ப்பிக்கிறேன். கவனக்குறைவு அல்லது போதையில் இருப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 திருத்தப்பட்டு, மது மற்றும் போதைப்பொருளின் ஆதிக்கத்தின் கீழ் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், மரணத்தை ஏற்படுத்துவோருக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

தற்போது, ​​குடி போதையில் ஆபத்தாக வாகனத்தை செலுத்தும் குற்றவாளிகள் ஏபிஜே 1987- இன் பிரிவு 41 (1)- க்கு உட்பட்டுள்ளனர். இது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் மற்றும் 5,000 ரிங்கிட் முதல் 20,000 ரிங்கிட்டுக்கு குறையாத அபராதத்தை கொண்டு வருகிறது.