Home One Line P1 விக்னேஸ்வரன் – சரவணன் ஷெராட்டன் விடுதியை வந்தடைந்தனர்

விக்னேஸ்வரன் – சரவணன் ஷெராட்டன் விடுதியை வந்தடைந்தனர்

953
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – இங்குள்ள ஷெராட்டன் தங்கும் விடுதியில் தேசிய முன்னணி மற்றும் மகாதீருக்கு ஆதரவான நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் குழுமியுள்ள நிலையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் அங்கு வந்தடைந்துள்ளனர்.

மஇகா ஆதரவாளர்கள் பலரும் அங்கு குழுமியுள்ளனர்.

அமையவிருக்கும் புதிய அரசாங்கம் தேசிய முன்னணியின் உதவியோடு அமையவிருப்பதால், புதிய அரசாங்கத்தில் மஇகாவும் இணையும் என்ற ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

மகாதீரின் புதிய அரசாங்கத்தில் பிகேஆர் கட்சியினரும், ஜசெகவினரும் இணைய மாட்டார்கள் என்பதால் தற்போது மனிதவள அமைச்சராக இருக்கும் குலசேகரன் இயல்பாகவே பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்படும்.

இதற்கிடையில் மற்றொரு இந்திய அமைச்சரான சேவியர் ஜெயகுமார் அஸ்மின் அலி பக்கம் இருக்கிறாரா அல்லது அன்வார் இப்ராகிம் பக்கம் சாய்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இரவு 9.20 அளவிலான அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி அலைவரிசை செய்திகளின்படி, சேவியர் ஜெயகுமார் அன்வார் இப்ராகிமின் இல்லத்தில் இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சேவியர் ஜெயகுமார், குலசேகரன் இருவருமே அமைச்சர்களாக இருக்கப் போவதில்லை என்றால், அவர்களுக்குப் பதிலாக இந்திய அமைச்சர்களாக இருக்கப் போகிறவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.

மஇகாவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான சரவணன் முழு அமைச்சராக புதிய அமைச்சரவையில் நியமனம் பெறலாம் என்ற ஆரூடங்களும் எழுந்துள்ளன.

(மேலும் செய்திகள் தொடரும்)