Home One Line P1 “அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம்! அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்

“அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியம்! அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – சரவணன் வேண்டுகோள்

1158
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தற்போது அமுலில் இருந்து வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 14 வரை நீடித்திருக்கும் என்ற நிலையில் அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அவசியம் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், யாரையும் சந்திக்காதீர்கள் எனவும் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணொளி ஒன்றின் வழி மஇகா உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் விடுத்திருக்கும் செய்தியில், அடுத்த 7 நாட்களுக்குள் கொவிட்-19 பாதிப்புகளை அதிகரிக்கச் செய்யாமல் இருக்க அனைவரும் ஒத்துழைத்து பாடுபட்டால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வெற்றி பெறும் என்றும் சரவணன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இதே போன்ற நிலைமைதான் இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடந்தது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை இறுதிவரை மக்கள் கடைப்பிடிக்காததால்தான் அங்கு மரண எண்ணிக்கை உயர்ந்தது. யாருக்குத் தொற்று இருக்கும் என்பது உங்களுக்கோ, எனக்கோ யாருக்கும் தெரியாது. நாட்டில் சுமார் 40 ஆயிரம் பேர்களுக்கு கொவிட்-19 இருக்கலாம் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. எனவே, நாம் அனைவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கடைப்பிடிக்காவிட்டால் இந்த எண்ணிக்கை இருமடங்காகவோ, மூன்று மடங்காகவோ உயரும் அபாயம் இருக்கிறது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது” எனவும் சரவணன் எச்சரித்தார்.

“எனவே, இயன்றவரையில் வீட்டை விட்டு வெளியே வராதீர். நம்மை மட்டுமல்ல – நமது குடும்பத்தினரையும் நாம் பாதுகாக்க வேண்டும். இதுதான் மிகவும் அபாயகரமான காலகட்டம். நல்ல உணவுகள் வாங்க வேண்டும், சந்தைக்கு செல்ல வேண்டும் என்றோ அடிக்கடி வெளியே செல்லாதீர்கள். பலர் இன்றுதான் சந்தைக்கு சென்று வந்தேன் என்று கூறுகிறார்கள். சந்தைகள்தான் கொவிட்-19 பரவக் கூடிய அபாயத்தைக் கொண்ட இடங்கள். எனவே கொஞ்சம் உணவுக் கட்டுப்பாட்டையும் அடுத்த 7 நாட்களுக்குக் கடைப்பிடிப்போம். நாம் முன்னெச்சரிக்கையாக இருக்காவிட்டால் ஆண்டவனால் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது” என்றும் சரவணன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.