கோலாலம்பூர் – தற்போது அமுலில் இருந்து வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 14 வரை நீடித்திருக்கும் என்ற நிலையில் அடுத்த 7 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அவசியம் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், யாரையும் சந்திக்காதீர்கள் எனவும் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காணொளி ஒன்றின் வழி மஇகா உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் விடுத்திருக்கும் செய்தியில், அடுத்த 7 நாட்களுக்குள் கொவிட்-19 பாதிப்புகளை அதிகரிக்கச் செய்யாமல் இருக்க அனைவரும் ஒத்துழைத்து பாடுபட்டால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வெற்றி பெறும் என்றும் சரவணன் தெரிவித்தார்.
“எனவே, இயன்றவரையில் வீட்டை விட்டு வெளியே வராதீர். நம்மை மட்டுமல்ல – நமது குடும்பத்தினரையும் நாம் பாதுகாக்க வேண்டும். இதுதான் மிகவும் அபாயகரமான காலகட்டம். நல்ல உணவுகள் வாங்க வேண்டும், சந்தைக்கு செல்ல வேண்டும் என்றோ அடிக்கடி வெளியே செல்லாதீர்கள். பலர் இன்றுதான் சந்தைக்கு சென்று வந்தேன் என்று கூறுகிறார்கள். சந்தைகள்தான் கொவிட்-19 பரவக் கூடிய அபாயத்தைக் கொண்ட இடங்கள். எனவே கொஞ்சம் உணவுக் கட்டுப்பாட்டையும் அடுத்த 7 நாட்களுக்குக் கடைப்பிடிப்போம். நாம் முன்னெச்சரிக்கையாக இருக்காவிட்டால் ஆண்டவனால் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது” என்றும் சரவணன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.