Home கலை உலகம் நடிகை அஞ்சலி கடத்தப்பட்டாரா?

நடிகை அஞ்சலி கடத்தப்பட்டாரா?

876
0
SHARE
Ad

Anjaliசென்னை, ஏப்ரல் 11- ஐதராபாத் ஓட்டலில் தங்கி இருந்த நடிகை அஞ்சலி, அங்கிருந்து கடத்தப்பட்டாரா? என்பது பற்றி ஆந்திரா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.அங்காடி தெரு, கருங்காலி, எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, சேட்டை உள்பட பல படங்களில் நடித்தவர், அஞ்சலி. சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், திடீரென்று வீட்டை விட்டு வெளியேறினார்.

‘‘இதுவரை நான் அம்மா என்று அழைத்து வந்த பாரதி தேவி, என் அம்மா இல்லை. அவர் என் சித்தி. அவரும், டைரக்டர் களஞ்சியமும் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்துகிறார்கள். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’’ என்று அவர் பரபரப்பாக பேட்டி அளித்தார்.

இதைத்தொடர்ந்து அவருடைய சித்தி பாரதி தேவி அளித்த பேட்டியில், ‘‘அஞ்சலி, ‘பிளஸ்–2’ படிக்கும்போது ஒரு பையனுடன் ஓடிப்போனார். நடிகை ஆன பிறகு, ஒரு கன்னட டைரக்டருடன் ஓடிப்போனார். அவரை மீட்டு வந்து முன்னணி நடிகை ஆக்கியது நான்தான்’’ என்று கூறினார்.

#TamilSchoolmychoice

இவரும், டைரக்டர் களஞ்சியமும் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அஞ்சலி மீது புகார் கொடுத்து இருக்கிறார்கள்.தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அஞ்சலி, வெங்கடேஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெறுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே அந்த படத்துக்கு ‘கால்ஷீட்’ கொடுத்திருந்த அஞ்சலி, இதுவரை படப்பிடிப்புக்கு போகவில்லை. படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்திருக்கிறார்கள்.

அஞ்சலி படப்பிடிப்புக்கு வராததால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க முடியவில்லை. இதனால் பட அதிபருக்கு தினமும் ரூ.5 லட்சம் நஷ்டம் ஏற்படுவதாக, தெலுங்கு பட அதிபர்கள் சங்கத்திலும், போலீசிலும் படப்பிடிப்பு குழுவினர் புகார் செய்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அஞ்சலி ஐதராபாத் மாதாபூர் பகுதியில் உள்ள தஸ்பல்லா ஓட்டலில் தங்கியிருந்ததாகவும், அவர் திடீரென்று காணாமல் போய்விட்டதாகவும் அவருடைய அண்ணன் ரவிசங்கர் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் தஸ்பல்லா ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தார்கள். அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அஞ்சலியும், அவருடைய சித்தப்பா சூரிபாபுவும் ஓட்டலுக்குள் செல்வது பதிவாகி இருந்தது. மறுநாள், திங்கட்கிழமை காலை 9–15 மணிக்கு ஜீன்ஸ் பேண்ட்–டீசர்ட்டுடன் ஓட்டல் அறையில் இருந்து அஞ்சலி வேகமாக வெளியே வரும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

அப்போது அஞ்சலி தோளில் ஒரு பையை தொங்க விட்டு இருந்தார். அவருடைய கைகள் அந்த பையை அழுத்தி பிடித்து இருந்தன. செல்போனில் பேசியபடியே அவர் வெளியே வந்தார். ஓட்டல் வாசலில் ஒரு இன்டிகா கார் நின்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் அஞ்சலி வேகமாக ஏறி அமர்ந்தார். காரின் பின் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருடைய உருவம் தெளிவாக தெரியவில்லை. அந்த கார் படுவேகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

எனவே அஞ்சலி கடத்தப்பட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாயமான நடிகை அஞ்சலியை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும், அவரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா தெரிவித்தார்.

அஞ்சலி வீட்டை விட்டு ஓடிப்போன விவகாரம், தமிழ்–தெலுங்கு பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பிரச்சினை தங்கள் படங்களை பாதிக்குமோ என்று அஞ்சலியை வைத்து படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் கவலைப்பட ஆரம்பித்து இருக்கிறார்கள்.