Home One Line P1 ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரி காலாவதியான மலேசியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது –...

ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரி காலாவதியான மலேசியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது – ஜேபிஜே

631
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் சாலை வரி காலாவதியான இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சாலை போக்குவரத்து துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ஷாஹருடின் காலிட் தெரிவித்தார்.

“மார்ச் 18 முதல் ஜூன் 14 வரை மொத்தம் 2,119,653 சாலை வரி மற்றும் 2,184,508 ஓட்டுநர் உரிமங்கள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

“இருப்பினும், அவர்கள் (ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள்) நடமாட்டக் காலகட்டத்தில் தங்கள் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் சாலை வரியை புதுப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், ஜேபிஜே எந்த நடவடிக்கையும் எடுக்காது.” என்று புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகஸ்ட் 31 வரை நடைமுறையில் இருக்கும் வரை சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் காலாவதியானவர்களுக்கு விலக்கு நீடிக்கும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் சாலையில் செல்லும்போது, செல்லுபடியாகும் காப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஷாஹருடின் கூறினார்.

“காலாவதியான சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

“ஏனென்றால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிந்ததும் அமலாக்கம் மீண்டும் தொடங்கும், மேலும் நீட்டிப்புகள் இல்லை.” என்று அவர் கூறினார்.

வாகனம் ஓட்டும்போது கைபேசிகளைப் பயன்படுத்துதல், அவசரகால பாதைகளைப் பயன்படுத்துதல் மற்றும் இருக்கை பட்டையை அணியாதது போன்ற பிற போக்குவரத்து குற்றங்களுக்கு எதிராக ஜேபிஜே தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று ஷாஹாருடின் கூறினார்.