Home One Line P1 கொவிட்19: புதிதாக 16 தொற்றுகள் பதிவு- மரணம் ஏதுமில்லை

கொவிட்19: புதிதாக 16 தொற்றுகள் பதிவு- மரணம் ஏதுமில்லை

545
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 16 பாதிப்புகளில், 3 சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்களாகும். எஞ்சிய 13 சம்பவங்கள் உள்ளூரிலேயே தொற்று கண்டவர்கள் தொடர்புடையதாகும்.

அந்நிய நாட்டவர்களில் 6 பேர் பெடாஸ் பகுதியில் உள்ள கோழித் தொழிற்சாலை ஒன்றில் தொற்று பீடிக்கப்பட்டவர்களாவர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,572-ஆக உயர்ந்துள்ளது.

சபா, தாவாவ் நகரிலுள்ள குடிநுழைவு முகாம் ஒன்றில் ஒரு தொற்று அடையாளம் காணப்பட்டது. இந்தோனிசியக் கள்ளக் குடியேறிகளை மீண்டும் அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கு முன்னர் அவர்களை இந்த குடிநுழைவு முகாமில் தடுத்து வைத்திருக்கின்றனர். அவர்களுக்கிடையே கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டபோது இந்தப் புதிய தொற்று அடையாளம் காணப்பட்டது.

மலேசியாவில் கொவிட்-தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 5-வது குடிநுழைவு முகாம் இந்த சபா முகாம் ஆகும்.

இந்த விவரங்களை சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அறிக்கை ஒன்றின் வழி இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) வெளியிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட மூன்று தொற்றுகளில் இருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மலேசியர்களாவர். ஒருவர் மலேசியாவில் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டிருக்கும் வெளிநாட்டவர்.

இன்று 10 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,156-ஆக உயர்ந்தது.

295 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். யாருக்குமே சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சையளிக்கப்படவில்லை.

அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் மரணம் ஏதும் நிகழவில்லை. கொவிட்-19 பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 121-ஆக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

மலேசியர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்துவர வேண்டுமெனவும் நூர் ஹிஷாம் கேட்டுக் கொண்டார். மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும், மூடப்பட்ட இடங்களைத் தவிர்க்க வேண்டும், நெருக்கமான உரையாடல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் நூர் ஹிஷாம் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

எப்போதும் போல மலேசியர்கள் சவர்க்காரம் கொண்டு கைகளைக் கழுவுவது, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் நூர் ஹிஷாம் வலியுறுத்தினார்.