Home One Line P2 இந்தியா- சீனா எல்லையில் மீண்டும் அதிகாரிகளுக்கு இடையே மோதல்

இந்தியா- சீனா எல்லையில் மீண்டும் அதிகாரிகளுக்கு இடையே மோதல்

575
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியா சீனா எல்லையில் மோதல் ஏற்பட்டு பல இராணுவ அதிகாரிகளின் உயிர் பலியானதை அடுத்து மீண்டும் லடாக்கில் மோதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிட்டதட்ட ஐந்து நிமிட அந்த காணொளியில், சீன அதிகாரியை இந்திய வீரர்கள் சரமாரியாக தாக்குகின்றனர். இருதரப்பினரும் கைபேசிகளில் படம் எடுத்தபடி இருக்கின்றனர்.

முதலில் அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது, பின்பு ஒருவரைக்கொருவர் திரும்பி செல்லுங்கள் என்று கூறி, சண்டையிட வேண்டாம் என்று இரு தரப்பிலிருந்தும் வீரர்கள் கூச்சலிடுகின்றனர். எனினும், ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படுகிறது.

#TamilSchoolmychoice

கிழக்கு லடாக் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி இந்தியா – சீனா இராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 76 பேர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையில் சுமூக பேச்சுவார்த்தை காண மால்டோவில் நேற்று திங்கட்கிழமை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த காணொளி எப்போது படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சீன தரப்பில் இதுவரையிலும் எத்தனை பேர் மரணமுற்றுள்ளனர் என்ற எண்ணிக்கையை சீன அரசு வெளியிடவில்லை. ஆயினும், அமெரிக்கா உளவுத்துறை சீன வீரர்கள் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் மரணமுற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சமீபத்திய மோதலைத் தொடர்ந்து தற்போது இந்தியா இராணுவ விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புதிய விதிப்படி சூழ்நிலைகளுக்கு ஏற்ப துப்பாக்கிகளை பயன்படுத்த படைத்தளபதிகளுக்கு இந்திய இராணுவம் அதிகாரம் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை சமாளிக்க இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனக்கூறியதைத் தொடர்ந்து இந்த புதிய விதிமுறைகளை இராணுவம் வகுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இதனிடையே, இது குறித்து கருத்துரைத்த சீனா, இந்தியா எல்லையில் பிரச்சனையை மேலும் மோசமடையச் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் முடிவு அதுவாக இருந்தால், சீனா அதற்கு தகுந்த பதில் கூறும் என்று கூறியுள்ளது.

சீனாவின் இராணுவ தளவாடங்கள் இந்தியாவைக் காட்டிலும் பெரியது என்றும், சாதாரண கற்கள் மற்றும் தடிகளைக் கொண்டு தாக்கியதில் பல இழப்புகளைச் சந்தித்த இந்தியா, சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.