Home One Line P1 கடலடி சுரங்கப்பாதை திட்டம்: இராமசாமி உட்பட பிற ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அலுவலகத்தில் சோதனை

கடலடி சுரங்கப்பாதை திட்டம்: இராமசாமி உட்பட பிற ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அலுவலகத்தில் சோதனை

452
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கோம்தார் வந்தடைந்ததாக டி ஸ்டார் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 9.40 மணியளவில் கோம்தாரின் 52- வது மாடியில் உள்ள மாநில பொதுப்பணித்துறை, பயன்பாடுகள் மற்றும் வெள்ளத்தைக் குறைக்கும் குழுவின் தலைவர் சைரில் கிர் ஜோஹாரி அலுவலகத்திற்குள் நான்கு அதிகாரிகள் நுழைந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.

மற்ற மூன்று அதிகாரிகள் காலை 10.05 மணிக்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி அலுவலகத்தில் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

சைரில் தனது அலுவலகத்தில் இல்லை, இராமசாமி பின்னர் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.

முதலமைச்சர் சௌ கோன் யோவையும் எம்ஏசிசி விசாரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், சோவின் அலுவலகத்தில் இருந்து இது குறித்து எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்று அது தெரிவித்தது.

பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அடுத்து பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியை விசாரிக்க இருப்பதாக நேற்று செய்தி வெளியானது.

“என் அலுவலகத்திற்கு ஒரு எம்ஏசிசி அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் நாளை (இன்று) வர விரும்புவதாகக் கூறினர்.

“நிச்சயமாக, நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். நாங்கள் இங்கே ஒரு திறந்த கதவுக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். அவர்களுக்கு தேவையான எந்த வகையிலும் எம்ஏசிசிக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்.

வருகையின் நோக்கத்தையோ அல்லது அவர்கள் கேட்க விரும்பும் கேள்விகளின் தன்மையையோ எம்ஏசிசி அவரிடம் சொல்லவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

“நான் கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபடவில்லை என்று 2018- ஆம் ஆண்டில் அவர்களிடம் கூறியுள்ளேன், ஏனென்றால் அது எனது இலாகா அல்ல.

“அவர்கள் என்னிடம் விரிவான தகவல்களைக் கேட்டால், அது பற்றி எனக்குத் தெரியாது என்று நான் சொல்ல வேண்டியுள்ளது, இது எனது இலாகாவின் கீழ் இல்லை.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மாநில ஆட்சிக்குழுவில் , மாநில பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித மூலதன மேம்பாடு மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் பொறுப்பில் இராமசாமி உள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் சம்பந்தமாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் செவ்வாய்க்கிழமை ​​கைது செய்யப்பட்ட பினாங்கு துறைமுக முன்னாள் ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ், சனிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்த புதிய தடயங்களைத் தொடர்ந்து, மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் இது தொடர்பாக ஆராயத் தொடங்கியது.

2018- இல் பிபிசி தலைவராக வருவதற்கு முன்பு, 52 வயதான செவ், உற்பத்தி, தொழில்கள் மற்றும் முதலீடுகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு உதவியாளராக இருந்தார்.

இதற்கிடையில், மூன்று எம்ஏசிசி குழுக்கள் கடந்த சில நாட்களில் கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக பல நிறுவனங்களில் சோதனைகளை நடத்தியது.

மே மாதத்தில், பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஆறு விசாரணை ஆவணங்களைத் திறந்திருப்பதை எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.

முதல் விசாரணை 2017 ஜூலை மாதம் தொடக்கப்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரியில் மேலும் ஐந்து விசாரணைகள் தொடங்கப்பட்டன என்றும் எம்ஏசிசி தெரிவித்தது.

மொத்தம் ஐந்து விசாரணை ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக மூன்று விசாரணை ஆவணங்கள் எம்ஏசிசிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அது தெரிவித்தது.

கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபட்டதற்காக 2018- ஆம் ஆண்டில், எம்ஏசிசி, ஈவின் பெர்ஹாட் நிர்வாக இயக்குனர் டத்தோ ஈவ் ஸ்வீ கெங் மற்றும் கொன்சோர்தியம் ஜெனித் கன்ஸ்ட்ரக்ஷன் செண்டெரியான் பெர்ஹாட் மூத்த நிர்வாக இயக்குனர் டத்தோ ஷாருல் அகமட் முகமட் சுல்கிப்லி ஆகியோரைத் தடுத்து வைத்தது.

அந்நேரத்தில் எம்ஏசிசி நான்கு மாநில அரசு நிறுவனங்களின் அலுவலகங்களை சோதனை செய்தது. பினாங்கு பொதுப்பணித் துறை, பினாங்கு மாநில செயலாளர், நிலங்கள் மற்றும் சுரங்கங்களின் பினாங்கு அலுவலகம், மற்றும் பினாங்கு மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை மற்றும் மூன்று சொத்து மேம்பாடு மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்பட்டன.