Home One Line P2 மலேசிய சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடாமன்னன் உலகநாதன்

மலேசிய சிங்கப்பூர் கவிதை உலகில் முடிசூடாமன்னன் உலகநாதன்

1314
0
SHARE
Ad

கிள்ளான் – “மலேசிய சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதை உலகில் ஓங்கி நிற்கும் இருபெருமலைகளை தமிழ்இலக்கிய வரலாறு என்றென்றும் மறந்திடமுடியாது. ஒரு மலை மலேசிய மண்ணில் ஓங்கி நின்றமலை. மற்றொன்று சிங்கப்பூரில் வான்வெளியில் உயர்ந்து நின்ற மலை. மலேசியாவில் தமிழ்ப் புலமையாளர்களை உருவாக்கி, அவர்கள், கவிஞர்களாக வழிகாட்டிய சுவாமி இராமதாசர் என்ற மலை. சிங்கப்பூரில் மட்டுமல்லாது மலேசியாவிலும் உணர்ச்சிச் செறிவுமிக்க கவிஞர்கள் தோன்ற வழிகாட்டிய கவிவாணர் ஐ. உலகநாதன் மற்றொரு மலை. அந்த ஐ.உலகநாதனின் பூதவுடல் 6.7.2020 அன்று தென்னகத்தின் பெங்களூருவில் மறைந்தது என்ற செய்தி கண்களைக் குளமாக்குகிறது” என கவிவாணர் ஐ.உலகநாதனின் மறைவு குறித்து மலேசியாவின் மூத்த கவிஞரான பாப்பாவின் பாவலர் முரசு நெடுமாறன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முரசு நெடுமாறன், ஐ.உலகநாதனுடன் நெருங்கிப் பழகிய நண்பருமாவார்.

“தனக்கென வாழத்தெரியாத, தான் மட்டும் வளர்ந்தால், போதுமென்று நினைக்காத அப்பழுக்கற்ற மனம் கொண்டவர் அவர். அவர் பெய்த கவிதை மழை இருநாட்டு இலக்கியச் சோலைகளை வளமாக்கியது; புதுப்புது பாவலர்கள் தோன்ற வழிவகுத்தது. ‘கவிதை’ என்பது கருத்துகளை விளக்கும் வெற்றுச் சொல்லடுக்கன்று. விழுமிய உணர்ச்சி, கற்பனைத் தேனில் புரண்டெழுந்து இனிய அசையாகி, எழுச்சிமிகு சீராகி சந்தம் தோய்ந்த அடியாகி, உள்ளத்தைச் சுண்டி இழுக்கும் பாட்டாவதுதான் கவிதை. அந்த வகையில் இருநாடுகளின் பாவலர் குழாமில் முடிசூடா மன்னனாய் இன்றுவரை திகழ்பவர் கவிவாணர் ஐ. உலகநாதனே. அந்தப் பெரும்பாவலன் வாய் இனி பாடாது என்று நினைக்கும் போதே நெஞ்சம் கலங்குகிறது” என்றும் முரசு நெடுமாறன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அந்தப் பாவரசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு நாம் நம் பணியை முடித்துக் கொள்ளக்கூடாது. அவர் சிங்கையிலும் மலேசியாவிலும் பெங்களூரிலும் பாடிக்குவித்துள்ள ஆயிரக்கணக்கான கவிதைகளை நிரல்படத் தொகுத்துக் களஞ்சியமாக்கத் தமிழ் இலக்கிய உலகம் திட்டமிடவேண்டும்” எனவும் கவிஞர் முரசு நெடுமாறன் தம் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரில் காலமான மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன்

கடந்த ஜூலை 6-ஆம் தேதி இந்தியாவின் பெங்களூரு நகரில் காலமான மலேசியாவின் மூத்த கவிஞர் ஐ.உலகநாதனின் மறைவுக்கு இரங்கல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஜூலை 7-ஆம் தேதி அவரது நல்லடக்கச் சடங்கு பெங்களூரிலேயே நடந்து முடிந்தது.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கமும் உலகநாதனின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தது.

“சந்தனக் கிண்ணம்” தந்த மலேசியக் கவிஞர்

தனது 84-வது வயதில் காலமான ஐ. உலகநாதன் மலேசியக் கவிஞர்களில் ஒருவரான ஐ.இளவழகுவின் மூத்த சகோதரராவார்.

ஐ. உலகநாதன் படைப்புகளில் புகழ்பெற்றது அவரது கவிதைகளின் தொகுப்பு  நூலான “சந்தனக் கிண்ணம்”. பல தருணங்களில் அவர் சந்தனக் கிண்ணம் உலகநாதன் என்றே அறியப்பட்டார்.

அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளில் “கவிவாணர்” என்ற அடைமொழியே இறுதிவரை அவருக்கு நிலைத்து நின்றது. அவரது மறைவு குறித்து தமிழகத்தின் “இந்து தமிழ் திசை” இணைய ஊடகம் “மலேசியக் கவிவாணர் மறைவு” என்றே செய்தி வெளியிட்டது.

உலகநாதன் மரபுக் கவிதையை மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் முன்னெடுத்த முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர்.

12 செப்டம்பர் 1936-ஆம் தேதி பேராக் மாநிலத்தின் பாரிட் நகரில் பிறந்தவர் ஐ. உலகநாதன். ஐயாசாமி, சாலம்மாள் தம்பதியரின் மகனாய் பிறந்தவர், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள லிங்கி தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.

பின்னர் பணிநிமித்தம் சிங்கப்பூர் சென்ற அவர் 1950-ஆம் ஆண்டு முதல் எழுத்துலகில் நுழைந்தார். சிங்கப்பூரில் இருந்தபோது கவிதை இயக்கம் நடத்தி பலரும் கவிதை உலகில் நுழையத் தூண்டுகோலாக இருந்தார்.

சிங்கையிலிருந்து வெளிவந்த தமிழ் முரசு நாளிதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார் ஐ. உலகநாதன். மாதவி இலக்கிய மன்றத்தைத் தோற்றுவித்தார். “மாதவி” என்ற பெயரில் இதழ் ஒன்றையும் நடத்தி சிங்கை, மலேசியக் கவிதை உலகில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.

ஐ. உலகநாதனிடம் யாப்பிலக்கணம் கற்ற பல மாணவர்கள் பின்னாளில் சிறந்த கவிஞர்களாகப் பரிணமித்தனர்.

வில்லுப்பாட்டு படைத்தவர், வானொலியில் ஒலியேறிய “தமயந்தி” என்ற கவிதை நாடகத்தையும் படைத்துப் பாராட்டு பெற்றார்.

பெங்களூரில் குடியேறினார்

1968-ஆம் ஆண்டில் இந்தியாவின் பெங்களூரில் குடியேறிய உலகநாதன் அங்கு இயங்கிய திருவள்ளுவர் கலை, இலக்கிய மன்றத்தின்வழியும் மற்ற தமிழ் இயக்கங்களின் மூலமும் தமிழ்த் தொண்டாற்றினார். இலக்கியப் பயிற்சிக் களம், பாட்டுப் பட்டறை, பூங்காக் கவியரங்கம், மெட்டுகள் ஒட்டிக் கொள்ளும் பாடல் புனையும் பயிற்சி என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளின் வழி தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து வந்தார்.

1985-இல் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. “திருப்பம்” என்ற பெயரில் இதழ் ஒன்றை ஐந்து ஆண்டுகள் நடத்தியிருக்கிறார்.

உலகநாதனின் புகழ் பரப்பிய “சந்தனக் கிண்ணம்”

இவரது முதல் நூலான “சந்தனக் கிண்ணம்” 1966-இல் வெளியீடு கண்டது. மலேசியத் தமிழ்க் கவிதைகளின் சிறப்புகளுக்காக தமிழ் நாட்டில் மதிப்பு ஏற்பட இந்நூல் காரணமாக அமைந்தது.

இந்நூல் குறித்து தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா தனது “தம்பிக்கு” என எழுதும் மடல்களில் ஒன்றில் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார்.

“சமுதாய மறுமலர்ச்சியை நாடி அவர் பாடியுள்ள வரலாற்றுப் பெட்டகம் “சந்தனக் கிண்ணம்” கவிதைத் தொகுப்பாகும்” என்று முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன் தனது இரங்கல் செய்தியில் புகழ்ந்துரைத்தார்.

பல நூல்களை எழுதியிருப்பதோடு, திருக்குறள் காமத்துப் பாலுக்கு வெண்பா வடிவிலேயே விளக்கம் எழுதியுள்ளார் ஐ.உலகநாதன்.