Home One Line P1 111-109 வாக்குகளில் அவைத் தலைவர் நீக்கம்

111-109 வாக்குகளில் அவைத் தலைவர் நீக்கம்

431
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடாளுமன்ற அவைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் அரிப்பை அவரது பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது.

பிரதமர் மொகிதின் யாசின் கொண்டு வந்த இந்தத் தீர்மானம் பல விவாதங்களுக்குப் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 111 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து109 வாக்குகள் விழுந்தன. இரண்டே வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மொகிதின் யாசினுக்குப் பெரும்பான்மை இருப்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனினும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய பெரும்பான்மையிலேயே மொகிதின் அரசாங்கம் செயல்படுவதும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

இன்றைய வாக்கெடுப்பில், அவைத் தலைவரை நீக்கும் விவாதங்களுக்குத் தலைமையேற்று நடத்திய துணை சபாநாயகரும் பத்து பகாட் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் ரஷிட் ஹாஸ்னோன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

தேசியக் கூட்டணியின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான மேக்சிமஸ் ஜோனிடி ஓங்கிலி இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ளாததற்கு அவர் முன் அனுமதி பெற்றிருந்தார். அவர் சபாவின் கோத்தா மெர்டு நாடாளுமன்ற உறுப்பினராவார்.

இதைத் தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் அவையின் துணைத் தலைவர் இங்கா கோர் மிங்கை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

அதைத் தொடர்ந்து புதிய அவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான நியமனங்கள் தீர்மானங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

அந்தத் தீர்மானங்கள் மீதிலும் இதே போன்ற வாக்கு வித்தியாசங்கள்தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.