Home One Line P1 மக்களவையில் இனவெறி, பாலின கருத்துக்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை

மக்களவையில் இனவெறி, பாலின கருத்துக்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை

362
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களவை அமர்வின் போது தேசத்துரோகம், இனவெறி, பாலின மற்றும் முரட்டுத்தனமான கருத்துக்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இன்று காலை நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் டத்தோ அசார் அசிசான் இந்த எச்சரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் இதுபோன்ற சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால், அவரும் அவரது பிரதிநிதிகளும் நாடாளுமன்ற விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நேற்று கட்சி கொறடாக்களுடன் ஒரு சந்திப்பு நடத்தியதாக அவர் கூறினார்.

அனைவரும் தேசத்துரோகம், இனவெறி, பாலின மற்றும் முரட்டுத்தனமான சொற்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக அசார் கூறினார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுமூகமான, இணக்கமான நாடாளுமன்ற அமர்வை உறுதிப்படுத்த தங்கள் முழு அர்ப்பணிப்பையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

” மக்களின் விருப்பங்களின் பேரில் நாம் இத்தகைய கனமான பொறுப்பை அவர்களை பிரதிநிதிப்பதற்காக ஏற்றுள்ளோம் என்பதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் நலன்களையும், மக்களவையின் புனிதத்தன்மையையும் பாதுகாக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒழுங்கான, கண்ணியமான மற்றும் நாகரிகமான முறையில் விவாதிக்க வேண்டும் என்றும் அசார் கேட்டுக் கொண்டார்.

அண்மையில், மக்களவையில் பத்து காவான் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவின், நிறம் தொடர்பான கருத்தினை வெளியிட்டு பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

கஸ்தூரி பேசும்போது, அப்துல் அசிஸ் அவர் “இருட்டாக இருக்கிறார், பார்க்க முடியவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். அவரை “கொஞ்சம் முகப்பூச்சுத் தூளை போடுமாறு” கூறினார்.

இந்த கருத்து தொடர்பாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.எஸ்.என். ராயர் சபாநாயகர், அசிஸை மன்னிப்புக் கேட்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

“உங்களிடம் ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். அத்தகைய மொழியைப் பயன்படுத்த அவரை அனுமதிக்க முடியாது. பாலிங் தனது கருத்துக்களைத் திரும்பப் பெறவும், மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட நான் சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன், ” என்று அவர் கூறினார்.

ஆனால், அசிஸ் “நானும் இருட்டாக இருக்கிறேன், பார்க்க முடியாது. எனவே இது ஒரு பிரச்சனை அல்ல. நானும் இருட்டாக இருந்தால் எப்படி கருத்தை திரும்பப் பெறுவது? ” என்று பதிலளித்திருந்தார்.

மறுநாள், பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் தனது மோசமான வார்த்தைகளைத் திரும்பப் பெறவும், “இருண்ட, கண்ணுக்கு தெரியாதது” என்று கூறியதற்காக கஸ்தூரி பட்டுவிடம் மன்னிப்பு கேட்கவும்  நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தப்பட்டது.

சபாநாயகர் அசார் ஹருணின் அறிவுறுத்தலின் பேரில் அசிஸ் மன்னிப்புக் கேட்டார்.

இருப்பினும், அவ்வாறு செய்வதற்கு முன்பு, அப்துல் அசிஸ் தாம் யாரையும் அவ்வாறு அழைக்கும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தார்.

“நான் யாரையும் கருமை என்று அழைக்கும் எண்ணம் இல்லை என்று மக்களிடம் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் நானே கூட, கடவுள் என்னை கருமையாக படைத்துள்ளார். இதன் மூலம் நான் சொன்ன வார்த்தையை மீட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்கிறேன், ” என்று அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், கஸ்தூரி தனது இடத்திலிருந்து எழுந்து அப்துல் அசிஸ் கொடுத்த காரணத்தை ஏற்கவில்லை.

அசிஸ் தனது இருக்கை பகுதியில் வெளிச்சத்தின் நிலையை குறிப்பிடுகிறாரா என்று அவர் கேள்வி எழுப்பினார். தம்மை முகப்பூச்சு தூள் அணியுமாறு கேட்டதற்கு எந்த காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.

“தூள் பயன்படுத்துவதற்கான பிரச்சனையை ஏன் எழுப்ப வேண்டும்? ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதே சம்பவம் மீண்டும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அசார் உறுதியளித்திருந்தார்.