Home One Line P1 முகக்கவசங்கள் அணிய மறுப்பவர்கள் சிறையில் அடைக்கப்படலாம்

முகக்கவசங்கள் அணிய மறுப்பவர்கள் சிறையில் அடைக்கப்படலாம்

464
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொது இடங்களில் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டவுடன் அவ்வாறு செய்ய மறுப்பவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

இது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

புதிய கொவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று மூன்றாவது நாளாக இரட்டை இலக்கங்களைத் தொட்டு உள்ளதால், அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் கவலை அளிப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று 15 சம்பவங்கள் பதிவாகி இருந்தன. அவற்றில் 11 சம்பவங்கள் உள்ளூர் தொற்றுகள்.

தொற்று நோய்களைத் தடுக்கும், கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டால், சட்டத்தை மீறுபவர்களுக்கு 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது சிறையில் அடைக்கப்படலாம் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

முகக்கவசங்களைப் பயன்படுத்துவதை சுகாதார அமைச்சகம் ஊக்குவிக்கிறது. குறிப்பாக பொது இடங்கள், அதிக ஆபத்துள்ள இடங்கள் அல்லது ஒரு மீட்டர் இடைவெளியில் கூடல் இடைவெளியை அமல்படுத்த கடினமான இடங்களில் இது அவசியம் என்று அவர் கூறினார்.

“நாங்கள் தற்போது அதை கட்டாயமாக்கவில்லை. சட்டத்தின் கீழ் அதை கட்டாயமாக்கினால், தண்டனையை நாங்கள் பரிசீலிக்க வேண்டும்.

“முகக்கவசங்களை அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கலாமா அல்லது சிறைத் தண்டனை விதிக்கலாமா என்று நாங்கள் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .” என்று அவர் நேற்று கூறினார்.

முகக்கவசங்களைப் பயன்படுத்துவது குறித்த அமைச்சின் பரிந்துரையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இது தொற்றுநோய்க்கான அபாயத்தை 65 விழுக்காடு குறைக்கலாம் என்று கூறினார்.