Home One Line P1 ஶ்ரீ முருகன் நிலையத்தின் இலவச இயங்கலை யூபிஎஸ்ஆர் தேர்வு!

ஶ்ரீ முருகன் நிலையத்தின் இலவச இயங்கலை யூபிஎஸ்ஆர் தேர்வு!

1108
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு தழுவிய நிலையில் இந்திய மாணவர்களுக்கு யூபிஎஸ்ஆர் இறுதி தேர்வினை ஸ்ரீ முருகன் நிலையம் இயங்கலை வாயிலாக இலவசமாக நடத்தவுள்ளது.

யூபிஎஸ்ஆர் தேர்வுக்குத் தயார் செய்வதன் வாயிலாகக் கிடைக்கப்பெறும் நன்மைகளிலிருந்து மாணவர்கள் விடுபடாமலிருக்க இந்த தேர்வு நடத்தப்படவுள்ளதாக அந்நிலையம் கூறியது.

கொவிட்19 பெருந்தொற்று காரணமாக மலேசியக் கல்வி அமைச்சு 2020-ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வினை அண்மையில் இரத்து செய்திருந்தது.

#TamilSchoolmychoice

“இத்தேர்வு இரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்த ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஆறாம் ஆண்டு மாணவர்கள் தேர்வினை முன்னோக்கி சுய கால அட்டவணையைப் பின்பற்றுதல், பாடங்களை மீள்பார்வை செய்தல், கடந்தாண்டு கேள்வித் தாட்கள், மாதிரி கேள்வித்
தாட்கள், ஆயிரக்கணக்கானப் பயிற்சி கேள்விகள் ஆகியவற்றைச் செய்து தங்களை தேர்வுக்குத் தயார் செய்திருப்பார்கள்.

“மேற்கூறிய நடவடிக்கைகள் மூலமாக மாணவர்கள் தன்னம்பிக்கை, கட்டொழுங்கு, விடாமுயற்சி, நேரந்தவறாமை, திட்டமிடல், எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தல் போன்ற முக்கிய திறன்களைப் பெறுவர்.

“இம்மாதிரியான திறன்கள் தான் நம் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு படிவம் 1 மற்றும் அவர்களது எதிர்காலத்திற்குப் பேருதவியாக இருக்கும்.” என்று அது ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.

யூபிஎஸ்ஆர் தேர்வு ஒரு குடும்பத்தின் கூட்டு முயற்சியாக விளங்குவதாகவும், 12 வயதில் மாணவர்கள் எதிர்க்கொள்ளும் இந்த முதல் அரசாங்கத் தேர்வுக்குப் பெற்றோர்களின்
பங்கு அளப்பரியது என்றும் அது கூறியது.

“இந்தத் தேர்வு ஒரு குடும்பத்தில், பெற்றோர் மற்றும் பிள்ளைகளிடையே அன்பு, அரவணைப்பு, ஆதரவு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. பெற்றோர்களுக்காகச் சிறப்பாகப் படித்து சாதனைப் புரிய வேண்டும் என்கிற வேட்கையையும் நம் மாணவர்களிடையே யூபிஎஸ்ஆர் தேர்வு
உருவாக்கம் செய்கிறது.

“ஆகவே, யூபிஎஸ்ஆர் தேர்வானது மாணவர்களின் கல்வி அடைவு நிலையைத் தீர்மானிக்கும் கருவி மட்டும் அல்ல. மாறாக, அந்தத் தேர்வுக்காக நம் மாணவர்கள் மேற்கொள்ளும் தயார்நிலையும் மற்றும் பயிற்சிகளும்தான் அவர்களை இடைநிலைப்பள்ளியில் சிறந்து விளங்கி உயர்வடையச் செய்யும். தேர்வுக்காக முன்னெடுக்கும் பயிற்சிகள் யாவும் நம் மாணவர்கள்களின் கல்வி மற்றும் வாழ்வியல் திறன்களை வளப்படுத்தும்.” என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த தேர்வு செப்டம்பர் 1 முதல் 8 வரை நடைபெறும். யூபிஎஸ்ஆர் இறுதி தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த 1,000 பயிற்சிக் கேள்விகள் மற்றும் 2 மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இவையாவும் ஶ்ரீ முருகன் நிலையத்தின் மின் வழி கற்றல் இணைய முகப்பு பிரம்மாஸ்திரா-வில் இடம்பெறும் (SMC Online Learning Portal – Brahmastra). யூபிஎஸ்ஆர் இறுதி தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள்
வழங்கப்படவுள்ளன.

இத்தேர்வினில் பங்குப்பெற தமிழ்ப்பள்ளி மற்றும் தேசியப் பள்ளிகளில் பயிலும் ஆறாம் ஆண்டு இந்திய மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

மேல் விபரங்களுக்கு (ஶ்ரீ முருகன் நிலைய முகநூல்):
https://www.facebook.com/srimurugancentre.officialpage/

பதிவுக்கு (ஶ்ரீ முருகன் நிலைய அகப்பக்கம்): www.smc.com.my