Home One Line P1 கொவிட்19: கெடாவில் மேலும் 6 தொற்று சம்பவங்கள் பதிவு

கொவிட்19: கெடாவில் மேலும் 6 தொற்று சம்பவங்கள் பதிவு

537
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,212-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 12 சம்பவங்களில் 2 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். மேலும், 10 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். கெடாவில் தாவார் மற்றும் சாலா தொற்றுக் குழுவில் முறையே நான்கு மற்றும் இரண்டு சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

பினாங்கில் தாவார் தொற்றுக் குழு சம்பந்தமாக ஒரு சம்பவம் பதிவாகி உள்ளது.

கெடாவில் தற்போது, சிவகங்கா தொற்றுக் குழு உட்பட, நான்கு புதிய தொற்றுக் குழுக்கள் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 17 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,876 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 183 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முன்னதாக, கெடாவில் கொவிட்19 சம்பவங்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் மாநில அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அது தெரிவித்திருந்தது.

தாவார், பாலிங், கோலா முடா, சாலா மற்றும் யானில் உள்ள பல இடங்களில் உள்ள உணவகங்களில் இனி உணவருந்த வாடிக்கையாளர்களை அனுமதிக்க மாட்டோம் என்று மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் கூறியிருந்தார்.

அதற்கு பதிலாக, அங்குள்ள உணவகங்களுக்கு உணவுகளை விநியோகிக்கும் சேவைகளை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இரவு சந்தைக்கான நேரம் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுப்படுத்தப்படும் என்றும், மளிகை சாமான்கள், சலவை கடைகள், 24 மணி நேர மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் உள்ள கடைகள் ஆகியவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் சனுசி கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொது பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன.

“நேர்மறையான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்.

“அரசாங்க நிறுவனங்கள் மற்றும் துறைகள் உள்ளிட்ட சமூக திட்டங்கள் ஒத்திவைக்கப்படும் என்றும் நாங்கள் முடிவு செய்தோம்.

“திருமணங்கள் உட்பட எந்த விதமான கொண்டாட்ட விழாக்களும் நிறுத்தப்பட வேண்டும்.

“கொவிட்19 சம்பவங்கள் உள்ள எந்த மசூதிகள் அல்லது வழிபாட்டுத் தலங்களும் உடனடியாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகின்றன. மேலும் அவை கண்காணிக்கப்பட வேண்டும்” என்று சனுசி கூறியிருந்தார்.

இரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில், மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் அடங்கும்.