Home One Line P1 கொவிட்19: மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 62 புதிய சம்பவங்கள்!

கொவிட்19: மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 62 புதிய சம்பவங்கள்!

1248
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிரடியாக 62 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான ஒருநாள் தொற்று சம்பவங்களின் பதிவு இதுவாகும்.

மலேசிய சுகாதார அமைச்சின் சார்பில் அதன் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 7) வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 4-ஆம் தேதிதான் மிக அதிகமாக ஒரே நாளில் 277 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் 10-ஆம் தேதி முதற்கொண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மீட்சிக் காலம் அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பான மரணம் ஏதும் நிகழவில்லை என்பதும் ஆறுதலான ஓர் அம்சமாகும்.

எனவே, இதுவரையில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கை 128 ஆக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 62 சம்பவங்களில் 56 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். எஞ்சிய 6 பேர் வெளிநாட்டிலிருந்து தொற்று கண்டவர்களாவர்.

புதிதாக அடையாளம் காணப்பட்ட சம்பவங்களில் 50 பேர் பெந்தெங் எல்டி என சபாவில் பரவிய தொற்றுத் திரள் குழுவைச் சேர்ந்தவர்களாவர். இந்தத் தொற்றுத் திரள் தாவாவ் சிறையிலும், லகாட் டாத்து வட்டார காவல் துறை நிலையத்திலிருந்தும் பரவியதாகும்.

இந்தத் தொற்றுத் திரள் பரவுவதற்குக் காரணம் தடுப்புக் காவல் மையங்களில் மிக நெருக்கமான அளவில் கைதிகள் வைக்கப்பட்டிருப்பதாகும் எனவும் சுகாதார அமைச்சின் அறிக்கை தெளிவுபடுத்தியது.

எந்த இடமாக இருந்தாலும் மக்களிடையே கூடல் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும் எனவும் நூர் ஹிஷாம் வலியுறுத்தினார்.

பெந்தெங் எல்டி தொற்றுத் திரள் முறையான ஆவணங்கள் இல்லாத இரண்டு வெளிநாட்டுக் குடியேறிகள் மூலம் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் லகாட் டாத்து காவல் நிலைய தடுப்பு முகாமிலிருந்து தொடங்கியது.

அதைத் தொடர்ந்து 1,404 பேர் மீது பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் அவர்களில் 66 பேர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் 64 பேர் சிறைக் கைதிகள் ஆவர். ஒருவர் சிறைத் துறை அதிகாரி. மற்றொருவர் அவரது ஒன்றரை வயது கொண்ட உறவினர் குழந்தையாவார்.

இதற்கிடையில் “சுங்கை தொற்றுத் திரள் (கிளஸ்டர்)” எனப்படும் புதிய தொற்றுக் குழு கெடாவில் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,459 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,124 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டில் மொத்தம் 207 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 4 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் உள்ளூரில் தொற்று கண்ட 56 பேர்களில் 40 பேர் வெளிநாட்டவர்கள். எஞ்சிய 16 பேர் உள்நாட்டவர்.

வெளிநாட்டிலிருந்து தொற்று கண்ட 6 பேரில் இருவர் மலேசியர்கள். எஞ்சிய 4 பேர் வெளிநாட்டவர்கள். இவர்களில் இருவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இந்தோனிசியாவையும் இன்னொருவர் எகிப்தையும் சேர்ந்தவர்.