Home One Line P2 ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணியை வென்றது

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணியை வென்றது

917
0
SHARE
Ad

அபுதாபி : நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) அபுதாபி நகரில் தொடங்கிய இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொண்டது.

மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்று முதலாவதாகப் பந்து வீசும் முடிவைத் தேர்ந்தெடுத்தது.

முதல் பாதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்கள் (ரன்) எடுத்தது.

#TamilSchoolmychoice

இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.2 பந்திலேயே 166 ஓட்டங்களை எடுத்தது. 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.

இதைத் தொடர்ந்து 5 விக்கெட்டுகளில் சென்னை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முதல் ஆட்டத்திலேயே அபாரமாக விளையாடி சென்னை அணி வெற்றி பெற்றிருப்பதை தமிழ் நாட்டு இரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவிற்கு வெளியே ஐபிஎல் போட்டிகள்

இந்தியாவின் புகழ்பெற்ற ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) கிரிக்கெட் போட்டிகள் நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) முதல் தொடங்கின.

இந்த முறை ஒரே ஒரு வித்தியாசம், வழக்கமாக இந்தியாவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டிகள் இந்த ஆண்டு மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு சிற்றரசுவில் நடைபெறுகின்றன.

காரணம், சொல்லித் தெரியவேண்டியதில்லை. கொவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவைக் கடுமையாகப் பாதித்திருப்பதுதான்!

ஐக்கிய அரபு சிற்றரசுவின் அபுதாபி நகரில் நேற்றைய ஐபிஎல் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் குழுத்தலைவர் (கேப்டன்) மகேந்திர சிங் தோனி தலைமையேற்றிருக்கிறார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இந்தக் குழுவின் உரிமையாளராகும்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹிட் ஷர்மா தலைமையேற்றிருக்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது இந்த அணியாகும்.

முதல் முறையாக இன்னொரு கோணத்திலும் வித்தியாசமான முறையில் நடைபெறுகிறது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள். அதாவது அரங்கிற்குள் இரசிகர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ அனுமதியில்லை.

எனினும் போட்டிகள் நேரலையாக இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின்றன. அதனால் கோடிக்கணக்கான இரசிகர்கள் தொலைக்காட்சி நேரலை வழி ஐபிஎல் ஆட்டங்களைக் கண்டு களிக்க முடியும்.