Home One Line P1 வல்லினம் இளம் எழுத்தாளர் விருது

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது

650
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இவ்வாண்டு தொடங்கப்பட்டுள்ள வல்லினம் இலக்கியக் குழுவின், வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கெடா மாநிலத்தில் உள்ள குரூண் எனும் சிற்றூரில் பிறந்த அபிராமி கணேசன் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியத்துறை மாணவியாவார். இருபத்து மூன்று வயதான இவர் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பொதிகை’ இதழில் தனது எழுத்து முயற்சியைத் தொடங்கினார். பின்னர் வல்லினம் இதழில் கட்டுரைகள் எழுத முனைப்புக்காட்டினார்.

அபிராமி கணேசன் தனது கட்டுரைகள் வழி அடையாளம் காணப்பட்டார். சூழலியல் தொடர்பான அவரது விரிவான கட்டுரைகளும் மலேசியச் சமூகச் சூழல் குறித்த ஆய்வு கட்டுரைகளும் அவரைத் தனித்து அடையாளம் காட்டின. எழுந்து வரும் புதிய எழுத்தாளர் ஒருவர் கொடுக்கும் தொடர் உழைப்பும் கண்டடையும் புதிய தளங்களும் அவர் நம்பிக்கைக்குறிய கட்டுரையாளராக அடையாளம் காட்டுகிறது.

#TamilSchoolmychoice

வல்லினம் இவ்வருடத்துக்கான இளம் எழுத்தாளர் விருதை கட்டுரை பிரிவுக்கானதாக முடிவெடுத்துள்ளது. விருது தொகையாக ரொக்கம் இரண்டாயிரம் ரிங்கிட்டுடன் (RM 2000) விருது கோப்பையும் வழங்கப்படும்.

வரும் காலங்களில் இளம் எழுத்தாளர்களின் பிற இலக்கிய முயற்சிகளும் விருதுக்கு பரிசீலிக்கப்படும் என்று வல்லினம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டுக்கான விருதை தொடர்ந்து கட்டுரைகளில் கவனம் செலுத்திவரும் பட்சத்தில் தகுதி கொண்ட படைப்பாளராக அபிராமி கணேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விருது விழா 18.10.2020 (ஞாயிறு) தைப்பிங் நகரில் அமைந்துள்ள கிராண்ட் பேரண் (Grand Baron) எனும் தங்கும் விடுதியில் நடைபெறுகிறது. கொவிட்19 காரணத்தால் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் 10.10.2020- க்குள் முன்பதிவு செய்துக்கொள்ளுதல் அவசியம்.

முன்பதிவு செய்யாதவர்களை விடுதி நிர்வாகம் அனுமதிக்காது. அனைத்துத் தொடர்புகளுக்கும் 016- 3194522 (நவீன்) தொடர்பு கொள்க.