Home One Line P2 திரையரங்குகளிலும், வலைத் திரைகளிலும் ஒரே நாளில் திரைப்படங்கள் இனி திரையிடப்படும்

திரையரங்குகளிலும், வலைத் திரைகளிலும் ஒரே நாளில் திரைப்படங்கள் இனி திரையிடப்படும்

800
0
SHARE
Ad
“வோண்டர் வுமன் 1984” – டிசம்பர் 25-இல் ஒரே நேரத்தில் திரையரங்கிலும், கட்டண வலைத் திரையிலும் வெளியாகிறது

நியூயார்க் : 2021-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் திரைப்படங்கள் வெளியிடப்படும் நடைமுறைகள் பெருமளவில் மாற்றம் காணும். தற்போதைய நடைமுறைப்படி முதலில் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு அடுத்த ஓரிரு மாதங்களில் கட்டண வலைத் திரைகளில் (ஓடிடி) வெளியிடப்படுகிறது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஹாலிவுட்டின் வார்னல் பிரதர்ஸ் நிறுவனமாகும் (Warner Bros.). 2021-இல் தாங்கள் வெளியிடும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படும் அதே நாளில், ஓடிடி எனப்படும் கட்டண வலைத் திரைகளிலும் வெளியிடப்படும் என இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

திரையரங்குகள் பல மூடப்பட்டிருப்பது, சில நாடுகளில் இன்னும் முழுமையாக செயல்படாமல் இருப்பது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வார்னர் மீடியா சிஎன்என் என்ற அனைத்துலக செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளராகும். இதைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையில் திரையரங்கு தொடர்புடைய நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்தன.

கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக 2021-ஆம் ஆண்டிலும் திரையரங்குகள் குறைந்த எண்ணிக்கையிலான இரசிகர்களைக் கொண்டே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகவே, ஒரே நேரத்தில் கட்டண வலைத் திரைகளிலும், திரையரங்குகளிலும் திரைப்படங்களை வெளியிடும் முடிவை வார்னர் பிரதர்ஸ் எடுத்துள்ளது.

அண்மையில் “டெனட்” என்ற திரைப்படத்தை முதலில் திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டனர். ஆனால் இதன் திரையரங்குகளின் வசூல் திருப்திகரமான அளவில் இல்லை.

இதைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் 25-ஆம் தேதி “வோண்டர் வுமன் 1984” என்ற திரைப்படத்தை ஒரே நேரத்தில் திரையரங்கிலும், கட்டண வலைத் திரையிலும் வார்னர் பிரதர்ஸ் முதல் கட்டமாக வெளியிடுகிறது.

இந்தத் திரைப்படம் டிசம்பர் 25-ஆம் தேதி இந்தியாவிலும் திரையரங்குகளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.