Home One Line P1 ‘பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லையென்றால் வேறு யாருடன் இணைவோம்?’- ஹிஷாமுடின்

‘பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லையென்றால் வேறு யாருடன் இணைவோம்?’- ஹிஷாமுடின்

587
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பெர்சாத்து உடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று கட்சியின் உச்சமன்றம் முடிவு செய்தால், 15- வது பொதுத் தேர்தலில் அம்னோ யாருடன் பணியாற்றும் என்ற கேள்வியை ​​முன்னாள் அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசைன் முன்வைத்துள்ளார்.

பிரதமர் மொகிதின் யாசினின் கட்சியை விட்டு பிரிந்து செல்ல வேண்டுமா என்று கட்சி தீர்மானிக்க வேண்டிய மற்றொரு பிரச்சனை இது என்று அவர் கூறினார்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க, அமைச்சர் கைரி ஜமாலுடினைப் போலவே, ஹிஷாமுடினும் தனது கட்சி அவரை பதவியிலிருந்து விலகக் கோரினால், அவரும் அதனை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில், அம்னோவுக்கு தெளிவான திசையும் நோக்கமும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, உச்சமன்றக் குழுவால் அறிவுறுத்தப்பட்டால் தாம் அமைச்சரவையிலிருந்து விலகுவதாக கைரி கூறியிருந்தார்.

“பெர்சாத்து உடனான தனது கூட்டணியைத் தொடர வேண்டாம் என்று கட்சி முடிவு செய்தால், 15-இல் அம்னோ யாருடன் பணியாற்றுவார் என்பதை கட்சி தீர்மானிக்க வேண்டும். ஜசெகவுடனா? பிகேஆர் உடனா அல்லது தனியாக போட்டியிடுவோமா? ” என்று ஹிஷாமுடின் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“அம்னோவின் அரசியல் ஒத்துழைப்பு கவனமாக செய்யப்பட வேண்டும், ஏனெனில் தேர்தல்கள் நாளை இல்லை. அம்னோ இதை பொறுப்புடன், புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். உணர்ச்சிகள் மற்றும் குறுகிய கால விளைவுகளின் அடிப்படையில் பரிசீலிக்க முடியாது. 13-வது பொதுத் தேர்தல்களில் நாம் வென்ற 133 இடங்களில், 14-வது பொதுத் தேர்தலில் 79 இடங்களை மட்டுமே வென்றோம். இதன் பொருள் நாம் 54 இடங்களை இழந்தோம். இந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ” என்று அவர் கூறினார்.

சுகாதாரம், தற்காப்பு, அத்துடன் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற முக்கிய அமைச்சகங்களில் பல தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், மக்களை வழிநடத்தும் திறனை நிரூபிக்க அம்னோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஹிஷாமுடின் மேலும் கூறினார்.

தங்களால் முடிந்தவரை மக்களுக்கு சேவை செய்வதற்கான அவர்களின் முயற்சிகளில் கட்சி அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.