Home One Line P1 “சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலத்தையும் கெடா மந்திரி பெசார் பறித்துக் கொள்வாரா” – இராமசாமி

“சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலத்தையும் கெடா மந்திரி பெசார் பறித்துக் கொள்வாரா” – இராமசாமி

577
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: கூலிமில் அமைந்துள்ள சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலம் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி இன்று புதன்கிழமை (பிப்ரவரி 24) எச்சரிக்கை தெரிவித்தார்.

மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட்டின் தலைமையில் கெடா மாநில அரசு இரண்டு இந்து கோவில்களை இடித்தது மட்டுமல்லாமல், தைப்பூச விடுமுறையை இரத்து செய்ததை சுட்டிக் காட்டிய இராமசாமி, இப்போது மாநில அரசு சுங்கை உலார் தமிழ்ப்பள்ளியின் நிலத்தை பறிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறினார்.

இப்பள்ளி நிலம் முதலில் தோட்ட நிறுவனமான சொக்பின் உரிமையின் கீழ் இருந்ததாகவும் பின்னர், இந்த நிலத்தை கெடா மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.கே) கையகப்படுத்தியதாகவும் இராமசாமி கூறினார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் பள்ளிக்காக இந்த நிலத்தைப் பெற்றுத் தர எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“பள்ளி நிலம் பி.கே.என்.கே.-க்கு சொந்தமாக உள்ளது. அவர்களிடமிருந்து நிலத்தை வாங்கும்படி பி.கே.என்.கே பள்ளிக்கு பரிந்துரைத்தது. பள்ளி நிர்வாகத்திடம் பணம் இல்லாததால் இந்த விஷயத்தை தீர்க்க கெடா மந்திரி பெசார் அலுவலகத்தை அணுகியுள்ளனர். பேச்சுவார்த்தைகளின் போது நிலத்தை மூன்று வருடங்களுக்கு நிபந்தனைகளுடன் பயன்படுத்துமாறு சனுசி பள்ளிக்கு தெரிவித்தார்,” என்று இராமசாமி தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

“மாநில ஆட்சிக்குழு  இந்த நிலைத்தை பள்ளிக்கே ஒதுக்கியிருக்கலாம். இந்த விசயத்திலும் இந்தியர்களிடம் சனுசி பாகுபாடு காட்டுகிறாரா? இது இந்திய சமூகத்திற்கு மற்றொரு சரிவாகும். கெடா அரசாங்கம் பலவீனமான, பொருளாதார ரீதியில் பின்தங்கிய சமூகத்தை நோக்கி ஏன் பழிவாங்குகிறது என்று எனக்குத் தெரியவில்லை?,” என்று அவர் கூறியுள்ளார்.