Home One Line P1 தடுப்புக் காவலில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கைதி மரணம்!

தடுப்புக் காவலில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கைதி மரணம்!

653
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தடுப்புக் காவலில் இருந்தபோது காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர், ஒரு மாதத்திற்கும் மேலாக செலாயாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காலமானார்.

மார்ச் 8- ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தனது 40 வயதான சகோதரர் கணபதி காலமானதை மருத்துவமனை உறுதிப்படுத்தியதாக அவரது சகோதரி, ஏ. தங்கமலர், 41, கூறியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

“எனது சகோதரர் இரவு 10.55 மணிக்கு (ஒரு ஞாயிற்றுக்கிழமை) அடிக்கப்பட்டக் காரணமாக இறந்தார். மரணத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. பிரேத பரிசோதனை (இன்று) நடத்தப்படும், ” என்று அவர் நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, இறந்தவரின் தாயார், எஸ். தனலெட்சுமி, 60, மார்ச் 11 அன்று கோம்பாக் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார். காவல் துறை காவலில் இருந்தபோது தனது மகன் தாக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

பிப்ரவரி 24-ஆம் தேதி கணபதி கைது செய்யப்பட்டார். அவர் தனது மற்றொரு மகனை விசாரிக்க உதவுவதற்காக கைது செய்யப்பட்டார்.

நீரிழிவு நோய் மற்றும் இருதய பிரச்சனைகள் இருந்த போதும், அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் ஆரோக்கியமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

இருப்பினும், கணபதியின் சகோதரி அவரது மருந்துகளை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது தனது சகோதரரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.

மார்ச் 8-ஆம் தேதி, இறந்தவரின் குடும்பத்திற்கு காவல் துறையிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது, கணபதி விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

காவல் துறையினர் அவரை இரப்பர் குழாய் மூலம் தாக்கியதாக தனது மகன் சொன்னதாக தனலெட்சுமி கூறினார். மருத்துவமனையில் இருந்தபோது, ​​கணபதிக்கு சிறுநீரக பிரச்சனைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் அவரது கால்கள் துண்டிக்கப்பட வேண்டியிருந்தது.

தடுப்புக் காவலில் இருந்ததால் கணபதியின் உடல்நிலை மோசமடைந்தது என்று அவரது குடும்பத்தினர் கூறினர்.

கணபதி மாட்டுப் பால் விற்கும் வணிகராக பணிபுரிகிறார். அவருக்கு ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காவல் துறை இன்னும் காத்திருக்கிறது என்று கோம்பாக் காவல் துறை தலைவர் அரிபாய் தாராவே தெரிவித்தார்.

“விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை, பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம், ” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.