Home உலகம் இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

582
0
SHARE
Ad

ஜகார்த்தா: காணாமல் போன இந்தோனிசிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருந்த 53 பணியாளர்களை உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது.

இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 24) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தோனிசிய கடற்படையின் தலைவர் யுதோ மார்கோனோ தெரிவித்தார்.

அந்த நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் என நம்பப்படும் 6 சிதிலங்களும் பத்திரிகையாளர் முன்னிலையில் வைக்கப்பட்டன. இந்தப் பொருட்கள் 850 மீட்டர் (930 கஜம்) ஆழம் கொண்ட கடல் பகுதியில் மிதந்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

கே.ஆர்.ஐ.நங்கலா – 402 என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பல் புதன்கிழமை (ஏப்ரல் 21) அதிகாலை பாலி கடற்கரையில் சுமார் 60 மைல் (100 கி.மீ) தொலைவில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

ஆறு போர்க்கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் 400 பேர் இந்த தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா மீட்புக்கான கப்பல்களை அனுப்பியுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை உதவிகளை வழங்கியுள்ளன.

நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மீண்டும் தகவல் அளிக்கத் தவறியது, தொடர்பு இழந்தது என்று கடற்படை தெரிவித்துள்ளது.

ஆழமாக நீரில் மூழ்குவதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர், நீர்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு இழந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன கப்பல் இந்தோனிசியாவால் இயக்கப்படும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும். இது 1970- களின் பிற்பகுதியில் தயாரிக்கப்பட்டது.

காணாமல் போன அந்தக் கப்பலில் 53 பணியாளர்கள் இருந்தனர். இன்று சனிக்கிழமையுடன் அவர்களுக்குத் தேவையான பிராண வாயு கையிருப்பு தீர்ந்திருக்கும் என நம்பப்படுகிறது.