Home கலை உலகம் இந்தி நடிகர் திலீப் குமார் 98-வது வயதில் காலமானார்

இந்தி நடிகர் திலீப் குமார் 98-வது வயதில் காலமானார்

609
0
SHARE
Ad
மனைவி சைராபானுவுடன் திலீப்குமார்

மும்பை : இந்தித் திரைப்பட உலகின் பழம் பெரும் நடிகர் திலீப் குமார் தனது 98-வது வயதில் காலமானார்.

இன்று புதன்கிழமை (ஜூலை 7) காலை 7.30 மணிக்கு அவர் மும்பையிலுள்ள இந்துஜா மருத்துவமனையில் காலமானார் என அவரின் குடும்ப மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவரின் மனைவி சைராபானுவும் நடிகையாவார். 1960-ஆம் ஆண்டுகளில் இந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

#TamilSchoolmychoice

எம்ஜிஆர் நடித்த “எங்க வீட்டுப் பிள்ளை” படம் வாகினி ஸ்டூடியோஸ் அதிபர் நாகிரெட்டியால் இந்தியில் தயாரிக்கப்பட்டபோது, அதில் கதாநாயகனாக நடித்தவர் திலீப் குமார் ஆவார்.

ராம் அவுர் ஷியாம் என்ற பெயரில் வெளிவந்த அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

திலீப் குமார் நடிப்பில் வெளிவந்த மற்றொரு சிறந்த வரலாற்றுப் படம் மொகலே ஆஜம். சிறந்த பாடல்களைக் கொண்ட படமாக இது திகழ்ந்தது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.

முதுமை காரணமாக சில தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டும் திலீப்குமார் நடித்து வந்தார். பின்னர் படிப்படியாக நடிப்பைக் குறைத்துக் கொண்டார்.

அடிக்கடி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், 98-வது வயது வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

முகமட் யூசுப் கான் என்ற இயற்பெயரோடு முஸ்லீமாக 1922-ஆம் ஆண்டில், இன்றைக்குப் பாகிஸ்தானின் ஒரு நகரான பெஷாவரில் பிறந்தவர் திலீப் குமார். அந்த வகையில் இந்தித் திரையுலகில் முதல் “கான்” நடிகர் அவர்தான்.

எனினும் 1949-ஆம் ஆண்டில் நடிக்க வந்தபோது திலீப் குமார் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார்.

ஆனால், பிற்காலத்தில் “கான்” என்ற பெயரோடு நடிக்க வந்த பல நடிகர்கள் பிரபலம் அடைந்தார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான் கான் என அந்தப் பட்டியல் நீளும்.

எனினும் இறுதி வரை திலீப் குமார் என்ற பெயருடனே அவர் இந்தியத் திரையுலகில் உலா வந்தார்.