Home நாடு சைட் சாதிக் : “பெரிக்காத்தானுக்கு ஆதரவு தருவதை விட வழக்கை சந்திப்பதே மேல்”

சைட் சாதிக் : “பெரிக்காத்தானுக்கு ஆதரவு தருவதை விட வழக்கை சந்திப்பதே மேல்”

947
0
SHARE
Ad

கோலாலம்பூர் : “என் மீதான வழக்கு, எனக்கு அரசியல் ரீதியாகத் தரப்படும் நெருக்கடி. பெரிக்காத்தான் நேஷனல் என்னும் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு தர நான் மறுப்பதால் என்மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பெரிக்காத்தானுக்கு ஆதரவு தருவதை விட நீதிமன்ற வழக்கைச் சந்திக்க நான் தயார்” என சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

“இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படும்போதுதான் நான் அரசியலில் இணைந்ததற்கான உண்மையான காரணங்களை உணர்கிறேன். நான் துவண்டு விட மாட்டேன். உண்மை ஒருநாள் வெல்லும். அரசியலுக்காக என் ஆன்மாவை நான் விற்று விடமாட்டேன்” என சமூக ஊடகங்களின் வழி பதிவிட்ட காணொலியில் சைட் சாதிக் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் கூட்டப்படும் நேரத்தில், முக்கியமான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய நேரத்தில் இதுபோன்ற நெருக்கடிகள் எனக்குத் தரப்பட்டு வந்திருக்கின்றன என்றும் கூறிய சைட் சாதிக், இப்போது ஜூலை 26-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் வேளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது எனக் கூறினார்.

நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சைட் சாதிக்

#TamilSchoolmychoice

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் பெர்சாத்து கட்சியின் நிதியை முறைகேடாகக் கையாண்ட குற்றத்திற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 22) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.

கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும். அவரைப் பிரதிநிதித்து வழக்கறிஞர்கள் ஹாய்ஜான் ஓமார், கோபிந்த் சிங் டியோ ஆகிய இருவரும் வழக்காடுவர்.

முறைகேடாக நிதியைக் கையாண்டது, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சைட் சாதிக் மீது சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவராக இருந்தபோது, கட்சியின் 1.2 மில்லியன் ரிங்கிட் நிதியை அவர் முறைகேடாகக் கையாண்டார் என்பதற்காக அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படுகின்றன.

பெர்சாத்து கட்சியின் சார்பில் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் சைட் சாதிக்.

ஆனால், மொகிதின் யாசின் பிரதமராக புதிய அரசாங்கத்தை அமைத்தபோது,  சைட் சாதிக் அவருடன் இணையவில்லை. பெர்சாத்துவுடன் பிரிந்து, மூடா என்ற புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.

அந்தக் கட்சிக்கான பதிவு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான நீதிமன்றப் போராட்டம் நீதிமன்றத்தில் வழக்காக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் அம்லா சட்டத்தின் கீழ் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகளுக்காக ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்திலும் சைட் சாதிக் விரைவில் குற்றம் சாட்டப்படுவார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏன் இந்தக் குற்றச்சாட்டுகள்?

பெட்டாலிங் ஜெயா இல்லத்தில் தனது கையிருப்பில் இருந்த 250,000 ரொக்கப் பணம் காணாமல் போய்விட்டதாக சைட் சாதிக் கடந்த ஆண்டு காவல் துறையில் புகார் செய்திருந்தார். அந்தப் பணம் தனக்கும் தனது பெற்றோர்களுக்கும் சொந்தமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளை முடுக்கி விட்டது.

அந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக சைட் சாதிக் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.