Home நாடு சைட் சாதிக் : பெர்சாத்து கட்சி நிதி கையாடலுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

சைட் சாதிக் : பெர்சாத்து கட்சி நிதி கையாடலுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

577
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் பெர்சாத்து கட்சியின் நிதியை முறைகேடாகக் கையாண்ட குற்றத்திற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 22) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.

கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும். அவரைப் பிரதிநிதித்து வழக்கறிஞர்கள் ஹாய்ஜான் ஓமார், கோபிந்த் சிங் டியோ ஆகிய இருவரும் வழக்காடுவர்.

முறைகேடாக நிதியைக் கையாண்டது, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சைட் சாதிக் மீது சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவராக இருந்தபோது, கட்சியின் 1.2 மில்லியன் ரிங்கிட் நிதியை அவர் முறைகேடாகக் கையாண்டார் என்பதற்காக அவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படுகின்றன.

பெர்சாத்து கட்சியின் சார்பில் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் சைட் சாதிக்.

ஆனால், மொகிதின் யாசின் பிரதமராக புதிய அரசாங்கத்தை அமைத்தபோது,  சைட் சாதிக் அவருடன் இணையவில்லை. பெர்சாத்துவுடன் பிரிந்து, மூடா என்ற புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.

அந்தக் கட்சிக்கான பதிவு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான நீதிமன்றப் போராட்டம் நீதிமன்றத்தில் வழக்காக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் அம்லா சட்டத்தின் கீழ் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகளுக்காக ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்திலும் சைட் சாதிக் விரைவில் குற்றம் சாட்டப்படுவார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.